ஓடை நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்த திமுக மாவட்ட கவுன்சிலர்! 1.50 ஏக்கர் நிலத்தை மீட்ட அதிகாரிகள்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானியில் 30 ஆண்டுகளாக அரசு நிலத்தை திமுக மாவட்ட கவுன்சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்த நிலையில் முதற்கட்டமாக 1.50 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் துவங்கி உள்ளது. இதனால் நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆக்கிரமிப்புகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் திமுக பிரமுகரிடம் இருந்து 1.50 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

ஓடை நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள காடப்பநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவர் திமுகவில் அம்மாபேட்டை ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இவர் தனது விவசாய நிலத்தின் அருகே 2.50 ஏக்கர் ஓடை புறம்போக்கு நீர் வழித்தடத்தை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து பல்வேறு பயிர்களை பயிரிட்டு வந்துள்ளதாக கூறப்டுகிறது.

மாவட்ட நிர்வாகத்திடம் புகார்
இதனால் மழை காலத்தில் ஓடை நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மழைநீர் விவசாய நிலத்தில் தேங்குவதால் பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயமும் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் சிரமத்தை சந்தித்து வந்தனர். மேலும் இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அதாவது ஆக்கிரமிப்பு தொடர்பாக வருவாய்த்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

1.50 ஏக்கர் நிலம் மீட்பு
இதையடுத்து வருவாய் துறையினர், நில அளவையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறப்படும் நிலத்தில் ஆய்வு செய்தனர். அப்போது சதாசிவம் ஆக்கிரமிப்பு செய்தது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டர் மூலம் நிலத்தை சமன் செய்து முதற்கட்டமாக 1.50 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

தொடர் நடவடிக்கை
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கிடையே தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலத்தை மீட்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.












Click it and Unblock the Notifications