பவானிசாகர் அணையிலிருந்து 11,600 கன அடி நீர் திறப்பு.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரி நீர் திறப்பு 11,600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Recommended Video
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும்.
4 மாவட்டங்களுக்கு அதி கனமழை.... இதெல்லாம் கைவசம் வைத்துக்கொள்வது அவசியம் மக்களே
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், கனமழை பெய்து வருகிறது.
பவானி சாகருக்கு வரும் நீர் அளவு
எனவே அணையின் நீர்மட்டம் 104.22 அடியை எட்டி உள்ளது. மேலும் அணையில் நீர் இருப்பு 32.1 டிஎம்சி ஆக உள்ளது. அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் இன்று காலை முதல் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீர் பவானி ஆற்றில் உபரி நீராக திறக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று மாலை 4 மணி நிலவரப்படி 8153 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து உபரி நீர் திறக்கும் அளவு 6800 கன அடியிலிருந்து 11600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பவானி அணை
அணையில் இருந்து பவானி ஆற்றில் 9800 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 1800 கனஅடி தண்ணீரும், என மொத்தம் 11600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் வருவாய்த்துறையினர் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் பவானிசாகர் அணை மற்றும் பவானி ஆற்றின் கரையோர கிராமங்களில் ஒலிபெருக்கி மூலமும் தண்டோரா மூலமும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காதிருமூர்த்தி அணை
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்த நிலையில் உடுமலையை அடுத்துள்ள அணிக்கடவு வாகத்தொழுவு கிராமத்தை இணைக்கும் தரைப்பாலத்தில் காதிருமூர்த்தி அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் தாராபுரம் அருகிலுள்ள உப்பாறு அணைக்கு சென்று கொண்டிருந்த நிலையில் நேற்று கனமழையின் காரணமாக கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் வெள்ளநீரானது தரைபாலத்திற்குமேல் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அவ்வழியாக மினி ஆட்டோவில் வந்த தந்தை சின்னச்சாமி மற்றும் அவரது மகன் செல்வகுமார் தரைப்பாலத்தை கடக்க முயற்சிக்கும் போது வெள்ளத்தில் அடித்துச்செல்லபட்டனர்.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்
தண்ணீரில் தத்தளித்த நிலையில் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அதிர்ஷ்டவசமாக செல்வக்குமார் அருகிலிருந்த மரக்களையை பிடித்து தப்பிய நிலையில் சின்னச்சாமி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இந்நிலையில் தண்ணீரில் தத்தளிப்பதை அறிந்த ஊர் பொதுமக்கள் உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து விரைந்து வந்த தீயனைப்பு துறையினர் மூன்று மணி நேர போராட்டத்திற்குப்பின் செல்வக்குமாரை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். காலை 8 மணி அளவில் இறந்த நிலையில் சின்னச்சாமியின் உடலை மீட்டனர்.
பூண்டி
பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் இருந்து தொடர்ந்து 4 நாட்களாக 7 ஆயிரம் கன அடி வீதம் கொசஸ்தலை ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது பெய்துவரும் மழை காரணமாக 5 மதகுகள் வழியாக 9 ஆயிரம் கனஅடியாக உபரி நீர் அதிகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது. மழைநீர் மற்றும் அம்மன் பள்ளி அணையிலிருந்து வரப்படும் நீரானது 7036 ஆயிரம் கனஅடி வந்து கொண்டிருக்கிறது. முழு கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்பொழுது 2410 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. மொத்தம் 35 அடி ஆழம் கொண்ட ஏரியில் தற்சமயம் 32.61அடி நீர் நிறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நீர் வரத்து அதிகரித்தால் உபரி நீர் உயர்த்தி திறக்கப்படும் என்று, பொதுப்பணித் துறையினர் கூறுகிறார்கள்.