தமிழ்நாட்டில் விரைவில் “தாமரை” மலரும்.. “ஆபரேசன் சவுத் இந்தியா”வை அறிவித்த அமித்ஷா
ஐதராபாத்: தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவிலும் விரைவில் பாஜக ஆட்சிக்கு வரும் என மத்திய உள்துரை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

வாரிசு அரசியல்
இன்று நடைபெற்ற 2 வது நாள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "வாரிசு அரசியல் காரணமாகவும் சாதி அரசியலாலும், பிறரை திருப்திபடுத்துவதற்காக செய்த அரசியல் காரணமாகவும் இந்தியா பல ஆண்டுகளாக துன்பங்களை அனுபவித்து வந்திருக்கிறது. நீண்ட காலம் நாட்டை ஆண்ட கட்சிகள் வீழ்ந்து உள்ளன.

குஜராத் கலவர வழக்கு
பிரதமர் நரேந்திர மோடி மீது குஜராத் கலவரம் தொடர்பாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. இந்த வழக்கு விசாரணையை எதிர்கொண்ட நரேந்திர மோடி மிகவும் அமைதியாக இருந்தார். அவர் அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தார்.

காங்கிரஸுக்கு பயம்
ஆனால், நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதால் காங்கிரஸ் கட்சி வன்முறையை தூண்டியது. இன்று எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு இருக்கின்றன. காங்கிரஸ் உறுப்பினர்கள் கட்சியில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முயல்கிறார்கள். ஆனால், தலைவரை இன்னும் தேர்வு செய்யவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு மோடி மீது பயம் உள்ளது.

ஆப்பரேசன் தென்னிந்தியா
இந்தியாவில் வரும் 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் சகாப்தம்தான். உலகத்துக்கே இந்தியா தலைமை தாங்கும். மேற்கு வங்கத்திலும், தெலுங்கானாவிலும் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, ஒடிசா மாநிலங்களில் விரைவில் பாஜக ஆட்சிக்கு ஆட்சியமைக்கும். தென்னிந்தியாவில் பாஜகவின் அடுத்தக்கட்ட வளர்ச்சி இருக்கும்." என்றார்.












Click it and Unblock the Notifications