அதிர்ஷ்டம் னா இதான்.. ஆட்டோ மீது கார் மோதல்.. மயிரிழையில் உயிர் தப்பிய பெண்.. டிரெண்ட் ஆகும் வீடியோ!
ஹைதராபாத்: சாலை ஓரம் நிற்கும் ஆட்டோ ரிக்ஷா மீது கார் மோதி விபத்துக்குள்ளாகும் நிலையில், அதில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் ஆட்டோ ரிக்ஷாவுக்கும் காருக்கும் இடையில் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பும் ஷாக்கிங் வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதுவும் இந்தியா போன்ற ஜனத்தொகை மிகுந்த நாடுகளில் இதைப்பற்றி சொல்லவே வேண்டாம். வாகனங்களின் எண்ணிக்கை ஒருபக்கம் அதிகரிக்கிறது என்றால் இன்னொரு பக்கம் விபத்துக்களும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதற்கு சாலை ஆக்கிரமிப்புகள், முறையான சாலை விதிகள் என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஓட்டுநரின் கவனக்குறைவே பெரும்பாலான விபத்துக்கு காரணங்களாக அமைந்து விடுகின்றன.

அதீத கவனத்துடன் செல்ல வேண்டும்
அதனால், தற்போது உள்ள கால கட்டங்களில் சாலையில் வாகனம் ஓட்டிச்செல்பவர்கள் மட்டும் அன்றி சாலையோரம் நடந்து செல்பவர்களும் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டிய நிலையே உள்ளது. பல வாகன ஓட்டிகள் அவசரம் என்ற பெயரில் தாறுமாறாக டிரைவிங் செய்வது, சிக்னல்களில் நிற்காமல் செல்வது என தினசரி சாலைகளில் இதையெல்லாம் சர்வ சாதாரணமாக காண முடியும். சாலையில் நடந்து சென்றாலும் அதீத கவனத்துடன் செல்ல வேண்டும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று டிரெண்டாகி வருகிறது.

14 வினாடிகள் ஓடும் வீடியோ
தெலுங்கானாவில் பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரி விசி சஜ்ஜனர் தனது ட்விட் பக்கத்தில், இந்த விபத்து தொடர்பான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வெறும் 14 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில், ''நகரத்தின் பிரதான சாலை ஒன்றின் வலது பக்கமாக பெண் ஒருவர் நடந்து செல்கிறார். அவருக்கு முன்னால் ஒரு ஆட்டோ ரிக்ஷா நின்று சாலை ஓரமாக நின்று கொண்டிருக்கிறது. ஆட்டோ ரிக்ஷாவை அப்பெண் கடந்து செல்லத்தொடங்கியதும் பின்னால் பெண்ணுக்கு எதிர்புறமாக வரும் ஒரு கார், நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதுகிறது.

பலரும் பதறிப்போயினர்
இதில் ஆட்டோ அப்படியே தலைகுப்புற கவிழ்கிறது. நொடிப்பொழுதில் நடைபெற்ற இந்த விபத்தின் போது காருக்கும், ஆட்டோவுக்கும் இடையில் சில நொடிகள் பெண் சிக்கி கொண்டார். இதனால், அப்பெண்ணுக்கு என்ன ஆனது? என சாலையில் விபத்தை பார்த்த பலரும் பதறிப்போயினர். ஆனால் அந்த பெண் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக அடிபடாமல் அப்பெண் வெளியே வந்து விடுகிறார்'' பார்க்கவே புல்லரிக்கும் வகையிலான இந்த வீடியோதான் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

அதிர்ஷ்டத்தை நம்பியே இருக்க முடியுமா?
இந்த வீடியோவை வெளியிட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி, மயிரிழையில் தப்பினார்... ஆனால், அதிர்ஷ்டத்தை நம்பியே எவ்வளவு காலம் இருக்க முடியும்? சாலையில் பொறுப்புடன் செல்லுங்கள்'' என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு கீழே நெட்டிசன்கள் மிகவும் காட்டமாக பதிவிட்டு வருகின்றனர். சாலையில் பொறுப்புடன் வாகனத்தை ஓட்ட வில்லையென்றால் இது அனைவருக்கும் நடக்கும் என்று நெட்டிசன் ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.

பொறுப்பற்ற டிரைவிங்
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், 'இது அஜாக்கிரதையான பொறுப்பற்ற டிரைவிங்' என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார். சாலையை கடக்கும் போது ஓரமாக நடந்து செல்லும் போதும் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுவதாகவும் அரசாங்கம் பயிற்சி மட்டுமே அளிக்கும் நல்ல வாகன ஓட்டியாக இருக்க வேண்டியது நமது பொறுப்பே எனவும் சிலர் பதிவிட்டு இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications