மத்திய அரசு கட்டும் புது நாடாளுமன்றம்! இதுதான் நல்ல பெயரா இருக்கும்.. வைங்க! பாஜகவை சீண்டும் கேசிஆர்
ஹைதராபாத்: தெலங்கானா சட்டப்பேரவையில் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்றம் கட்டும் பணி கடந்த 2020ல் தொடங்கப்பட்டது. இதன் கட்டுமானப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரை இந்த கட்டடத்தில் நடத்த அரசு முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில் இந்த கட்டடத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும் என்றும், புதிய மின்சார திருத்த மசோதா திரும்பப்பெற வேண்டும் என்றும் தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அட.. தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மகன் பிறந்தநாளுக்கு வரலியாம்.. 4 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட்!
புதிய நாடாளுமன்றம்
'சென்டரல் விஸ்டா மறு அபிவிருத்தி' திட்டத்தின் கீழ் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை டாடா நிறுவனம் கடந்த 2020ல் கட்டத் தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ரூ.977 கோடி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் மக்களவையில் 543 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 245 உறுப்பினர்களும் அமர்ந்து விவாதிக்கும் வகையில் அதிநவீனமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் இறுதி பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தெலங்கானா அரசு ஒரு முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
தீர்மானம்
அம்மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமா ராவ் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். தீர்மானத்தின்படி டெல்லியில் புதியதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்திற்கு டாக்டர் பி ஆர் அம்பேத்கர் என பெயர் மாற்றப்பட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என முன்மொழியப்பட்டது. இந்த தீர்மானம் அனைவராலும் வரவேற்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே மத்திய அரசு மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தற்போது இந்த தீர்மானத்தையும் நிறைவேற்றியிருப்பது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பேத்கர் பெயர்
இது குறித்து பேசிய அமைச்சர் ராமாராவ், "அரசியலமைப்புச் சட்டத்தின் 3வது பிரிவைத் உருவாக்கிய அம்பேத்கரால் இன்று தெலங்கானா மாநில சட்டசபையில் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். அது இல்லாவிட்டால் தெலங்கானா இருக்காது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பெயரை புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு மத்திய அரசு சூட்ட வேண்டும் என வலியுறுத்தி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார்.
மற்றொரு தீர்மானம்
மேலும், "அம்பேத்கரின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டுதான் கடந்த 2001ல் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி முதலமைச்சர் சந்திர சேகர ராவ் உருவாக்கினார். இன்று இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இருக்கிறது. அம்பேத்கர் ஜனநாகயத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தார். தெலங்கானா மக்கள் என்றென்றும் அவருக்கு கடமைப்பட்டிருப்பார்கள்" என்றும் கூறினார். இதனையடுத்து மற்றொரு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
மின்சார சட்ட திருத்த மசோதா 2022
அதாவது மின்சார சட்ட திருத்த மசோதா 2022ஐ திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. "இந்த மசோதா மின் ஊழியர்களுக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் சாதகமானது அல்ல. மட்டுமல்லாது இது மாநில அரசுகளின் உரிமைகளை மீறுகிறது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளது. எனவே இந்த மசோதாவை திரும்பப் பெற இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது" என்றும் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்து அமைச்சர் பேசினார். இந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.