இந்தியாவிலேயே முதல் மாநிலம்.. மே 29ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.. தெலுங்கானா அரசு அதிரடி
ஹைதராபாத்: மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை மட்டுமே ஊரடங்கு உத்தரவை நீடித்த நிலையில், தெலுங்கானா மாநில அரசு மே 29-ஆம் தேதி வரை தங்கள் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் இன்று ஹைதராபாத் நகரில் அளித்த பேட்டியில் இதை தெரிவித்தார்.

மக்களின் உயிருடன் என்னால் விளையாட முடியாது. தெலுங்கானாவில் நாளுக்குநாள் வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டு இருக்கிறது. அதிலும் மொத்த மாநிலத்தில் சுமார் 66 சதவீதம் அளவுக்கு ஹைதராபாத் பகுதியில் பதிவாகியுள்ளது. சமூக பரவல் என்ற நிலையை அடைந்து விடாமல் இருக்க, ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு அனுமதி கொடுத்து இருந்தாலும், சிவப்பு மண்டல பகுதிகளில் கடைகள் திறக்கப்பட மாட்டாது. இது மதுபான கடைகளுக்கும் பொருந்தும். சிவப்பு மண்டல பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய கடைகள் மட்டுமே இயங்கும். எலக்ட்ரிக்கல், ஹார்டுவேர் மற்றும் சிமெண்ட் கடைகளுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவை மட்டும் திறந்து இருக்கலாம்.
ஹைதராபாத் மக்கள் என் மீது அதிருப்தி அடையக் கூடும். ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. மே 15ம் தேதி வரை நிலைமையைக் கண்காணித்த பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கையை அரசு எடுக்கும். இவ்வாறு சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி புதிதாக 11 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் அங்கு மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,096 என்ற அளவில் உள்ளது. இருப்பினும் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது அந்த மாநில அரசு.
அதேநேரம், ஒரே நாளில் 500 பேருக்கும் மேல் பாதிப்பை பதிவு செய்துவரும், தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு கொண்டுவரப்பட்டு, மதுக் கடைகள் திறக்கப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடனும், ஜாக்கிரதையுடன் செயல்பட்டால்தான் தமிழகத்தில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.












Click it and Unblock the Notifications