"ஆண்களுக்கு தனி பேருந்து?" மகளிர் இலவச திட்டத்தால் திணறும் தெலுங்கானா.. இது என்ன புதுசா இருக்கு
ஹைதராபாத்: மகளிர் இலவச பயணத்தால் பேருந்துகளில் பயணிக்கும் மகளிர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அம்மாநில அரசு இப்போது வினோத பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது.
தமிழ்நாட்டைப் போலவே தெலுங்கானா மாநிலத்திலும் காங்கிரஸ் அரசு மகளிருக்குப் பேருந்து பயணம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தது. தேர்தலுக்கு முன்பே இத்திட்டத்திற்குப் பெண்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

ரேவந்த் ரெட்டி முதல்வராகப் பதவியேற்றதும் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது. மகா லக்ஷ்மி என்ற பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்திற்குத் தெலுங்கானாவில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாகப் பெண்கள் இத்திட்டத்தால் மிகப் பெரிய பலனை அடைந்துள்ளனர்.
பெண் பயணிகள்: இதன் காரணமாகத் தெலுங்கானாவில் பேருந்துகளில் செல்லும் பெண்களின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் 20% வரை அதிகரித்துள்ளது. அதேநேரம் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அங்கே மற்றொரு வினோதமான சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது அங்கே பேருந்துகளில் பயணிக்கும் ஆண்கள் தங்களுக்கு இருக்கைகள் கிடைப்பதில்லை எனப் புகார் அளிக்கிறார்கள். முதியவர்கள், மாணவர்கள் எனப் பல தரப்பினரும் இந்த புகாரை முன்வைத்துள்ளனர்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தெலுங்கானா அரசு பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்து வருகிறது. முதற்கட்டமாக எப்படி பேருந்துகளில் பெண்களுக்கு எனத் தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டு உள்ளதோ.. அதேபோல ஆண்களுக்கு எனத் தனியாக இருக்கைகள் ஒதுக்குவது குறித்து பரிசீலனை செய்து வருகிறது. அதேபோல மகளிர் மட்டும் பேருந்துகளைப் போல ஆண்கள் மட்டும் பயணிக்கும் பேருந்துகளை இயக்குவது குறித்தும் ஆலோசித்து வருகிறது.
ஆண்களுக்குச் சிக்கல்: தெலுங்கானாவில் இப்போது இயங்கும் பெரும்பாலான பேருந்துகளில் பெண்களே நிரம்பியுள்ளனர். இதனால் வேறுவழியின்றி ஆண்கள் பேருந்துகளைத் தவிர்த்துவிட்டு ஷேர் ஆட்டோ, மெட்ரோ அல்லது தனிப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் மாநகராட்சி நிர்வாக இயக்குநர், வி.சி.சஜ்ஜனார் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதையடுத்து தேவையான வழித்தடங்களிலும் குறிப்பிட்ட நேரத்திலும் ஆண்கள் மட்டும் பயணிக்கும் சிறப்புப் பேருந்துகளை இயக்குவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்,
இது மட்டுமின்றி மற்ற பேருந்துகளிலும் கூட ஆண்களுக்கான தனி இருக்கைகள் மற்றும் குறிப்பாக முதியோருக்குத் தனியாக இருக்கைகள் ஒதுக்கீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மகளிர் இலவச பயணத்தைப் பாதிக்காத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறப்புப் பேருந்துகள் சாத்தியமா: பள்ளிகள் அதிகம் இருக்கும் இடங்களில் மாணவர்களுக்குச் சிறப்புப் பேருந்து அல்லது பள்ளி நேரங்களில் சிறப்பு இருக்கை ஒதுக்கீடு செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து அம்மாநில போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆண் பயணிகள் சிரமத்தை எதிர்கொள்வதாகத் தகவல் கிடைத்தது. கூட்டம் காரணமாக ஆண்கள் பேருந்தைத் தவிர்க்கத் தொடங்கியுள்ளதாக எங்கள் நடத்துநர்கள் தெரிவித்தனர்.
இந்த பிரச்சினையைச் சரி செய்ய பல்வேறு மாற்று வழிகள் குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம். ஆண்களுக்குச் சிறப்புப் பேருந்துகளை இயக்குவது குறித்து ஆலோசித்து வருவது உண்மை தான். ஆனால் ஏற்கனவே எங்களிடம் பஸ் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் உடனடியாக இதுபோல ஆண்களுக்குச் சிறப்புப் பேருந்துகளை எங்களால் இயக்க முடியாது" என்று அவர் தெரிவித்தார்.
இரட்டிப்பான பெண் பயணிகள்: தெலுங்கானாவில் மகளிர் இலவச பயணத் திட்டம் அமலுக்கு வந்த பிறகு பெண் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முன்பு பேருந்துகளில் பெண் பயணிகளின் விகிதம் 69ஆக இருந்த நிலையில், அது இப்போது 89 சதவீதமாக அதிகரித்துள்ளது. இலவச பயணத் திட்டத்திற்கு முன்பு வரை அங்கே பேருந்துகளில் தினமும் 12 லட்சம் முதல் 14 லட்சம் பெண்கள் பயணம் செய்து வந்த நிலையில், இப்போது அது இரண்டு மடங்கு அதிகரித்து 30 லட்சமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்து.












Click it and Unblock the Notifications