அள்ள அள்ள தங்கம், கட்டுக்கட்டாக பணம்.. கோடிகளை குவித்த பெண் தாசில்தார்.. மலைத்துப்போன போலீஸ்
ஹைதராபாத்: அள்ள அள்ள தங்கம், எடுக்க எடுக்க சொத்து பத்திரமும், கட்டுக்கட்டாக பணமும் சிக்கியிருக்கிறது ஒரு பெண் தாசில்தார் வீட்டில்.. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தாசில்தார் வீட்டை அந்த மாநில லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்திய போது சுமார் 3.2 கோடி ரூபாய் மதிப்புள்ள கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கரீம்நகர் ஜம்மிகுண்டா மண்டல் தாசில்தார் மற்றும் இணைப் பதிவாளராக இருந்த மார்கலா ரஜனி ஊழல் புகாரில் சிக்கியதற்காக அவர் மீது அந்த மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மார்கலா ரஜனியின் வீடு மற்றும் அவரது உறவினர்கள், கூட்டாளிகள் மற்றும் பினாமி என்று சந்தேகப்படும் நபர்களின் வீடுகளுக்குச் சொந்தமான 5 இடங்களில் புதன்கிழமை அன்று தெலுங்கானா மாநில ஏசிபி போலீசார் சோதனை நடத்தினார்கள்..

இந்த சோதனையில் கணக்கில் வராத ரொக்கப்பணம் ரூபாய் 1.5 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வங்கி கணக்கில் 25.70 லட்சம் இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் 1462 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்கள், ரூ.9 லட்சம் மதிப்புள்ள வீட்டுப் பொருட்கள், 31 லட்சம் மதிப்புள்ள கார் உள்ளிட்ட வாகனங்கள், 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 7 ஏக்கர் விவசாய நிலம், ரூ.21 லட்சம் மதிப்புள்ள 22 வீட்டு மனை ஆவணங்கள் மற்றும் 50 லட்சம் மதிப்பிலான மூன்று சொத்துகளை வாங்கியதற்கான முன்பண ஒப்பந்த ஆவணங்கள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெண் தாசில்தார் மார்கலா ரஜனி வீட்டில் போலீசார் பறிமுதல் செய்த நிலத்தின் ஆவணங்கள் எல்லாம் சந்தை மதிப்பின்படி கூறப்பட்டவை. ஆனால் உண்மையில் சொத்து மதிப்பு பல கோடிகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் தெலுங்கானா மாநில போலீசார் வெளியிட்ட படி பார்த்தாலே மொத்த சொத்து மதிப்பு சுமார் 3 கோடியே 20 லட்சத்து 16 ஆயிரத்து 915 ஆகும்.

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு ஏற்கனவே ஒரு பெண் தாசில்தார் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார். ஹைதராபாத் நகரில் அரசு கட்டுமான பணி டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரரிடம் ரூ.84,000 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி ஜகஜோதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அப்போது கைது செய்தனர். இதையடுத்து ஜகஜோதி வீட்டிற்கு சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.

அதில் கணக்கில் வராத ரூ.65 லட்சம் ரொக்கம், 3.64 கிலோ எடை கொண்ட தங்க நகைகள், சில சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். ஜகஜோதிக்கு ஏராளமான ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகள் உள்பட சுமார் ரூ.15 கோடியில் சொத்துகள் இருப்பது அப்போது தெரிய வந்தது. கையும் களவுமாக மாட்டிக்கொண்ட அவர் அப்போது தெலுங்கானா மாநிலத்தில் பெரிய அளவில் பேசுபொருளானார். அந்த வரிசையில் கரீம்நகர் தாசில்தாரான மார்கலா ரஜனியும் சிக்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications