சத்தியமங்கலம் வனத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்.. களமிறங்கிய வனத்துறை அதிகாரிகள்!
சத்தியமங்கலம் : அழிந்து வரும் இனமாக கருதப்படும் பிளாக்புக் எனஅழைக்கப்படும் வெளிமான்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருவதாக வனத்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Recommended Video
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் வெளிமான்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள்- 6
வல்லநாடு சரணாலயத்திற்கு அடுத்தப்படியாக சத்தியமங்கலம் தெங்குமரஹாடா வனப்பகுதியில் வெளிமான்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது வனஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் வனத்துறையினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
வெளிமான் இயல்புகள்
இந்திய துணைக் கண்டத்தில் தோன்றியதாக கருதப்படும் வெளிமான் விலங்கிற்கு புல்வாய் மான், திருகுமான், முருகுமான் எனவும் தமிழில் அழைக்கப்படுகின்றன. இவ்வகை மான் ஆண் இனமாக இருந்தால் இரலை என்றும் பெண் இனமாக இருந்தால் கலை என்றும் அழைக்கப்படுகிறது. அகன்ற சமதரை வெளிகளில் குடியிருக்கும் இந்த மான்கள் பெரும்பாலும் வேட்டையாடப்பட்டதால் இதன் எண்ணிக்கை குறைந்து விட்டது. இந்த மான் தற்போது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலும், அர்ஜெண்டினாவின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன. இந்த மான்கள் மணிக்கு சுமார் 64-96 கிமீ வேகத்தில் செல்லக்கூடியதாகும். இந்த மான்கள் புற்களை உணவாக உட்கொள்ளும். எதிரிகள் வந்துவிட்டால் இந்த மான்கள் மற்ற மான்களை எச்சரித்து உடனடியாக அந்த இடத்தை விட்டு ஓடிவிடும். அதிகபட்சம் 2 ஆண்டுகளில் பருவம் அடையும் இந்த மான்கள் ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்யக்கூடியனவாகும். வெளிமானின் பேறுகாலம் 5 மாதங்கள் ஆகும். பேறுகாலத்திற்கு பின்னர் ஒரு குட்டியை ஈன்றெடுக்கும். குட்டி ஈன்ற இரண்டு வாரங்களில் தாய் அடுத்த சினைக்குத் தயாராகிவிடும். இதனுடைய ஆயுட்காலம் அதிகபட்சம் 12 ஆண்டுகள் என கணக்கிடப்படுகிறது.பெரும்பாலும் இந்த மான்கள் புலிகளால் வேட்டையாடப்படுவதால் ஆயுட்காலம் குறித்த சரியான தகவல்கள் இல்லை
வல்லநாடு வெளிமான் சரணாலயம்
இந்த அரியவகை மான்கள் மனிதர்களால் வேட்டையாடப்பட்டு அழிந்து வரும் இனமாக மாறியதால் தமிழ்நாடு வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972-ன் கீழ், பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்டது. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச கூட்டமைப்பின் அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் வெள்ளை மானும் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து வெளிமான்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் வெளிமான்கள் சரணலாயம் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகாவில் உள்ளது.
தமிழகத்தின் வெளிமான்களுக்கு என பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சரணாலயம் இதுவாகும். வல்லநாடு வெளிமான் சரணாலயம் 1641.21 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1987-ம் ஆண்டு தமிழக அரசால் பாதுகாக்கப்பட்ட சரணாலயமாக வல்லநாடு வெளிமான் சரணாயலம் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த சரணாலயத்தில் 2010 தொடக்கத்தில் 26 வெளிமான்களே இருந்த நிலையில் படிப்படியாக அதிகரித்து தற்போது 200ஐ தொட்டுள்ளது. வெளிமான்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது வனத்துறையினர், இயற்கை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
வனவிலங்குகள் கணக்கெடுப்பு
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தமிழகத்தில் 4 புலிகள் காப்பகங்களில் அதிக பரப்பளவு கொண்ட வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை, செந்நாய், கழுதைப்புலி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. இங்கு விலங்குகள் குறித்த கணக்கெடுப்பு பணி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். அதன்படி மழைக் காலத்திற்கு பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தெங்குமரஹாடா வனப்பகுதியில் அரியவகை மான் இனமான பிளாக்பக் என்றழைக்கப்படும் வெளிமான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெளிமான்கள் அதிகரிப்பு
பவானிசாகர் வனச்சரகத்தில் உள்ள தெங்குமரஹாடா வனப்பகுதியில் அரிய வகை மான் இனமான பிளாக்பக் என்று அழைக்கப்படும் வெளிமான்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்றும், கருவண்ணராயர் கோயில் வனப்பகுதி, மாயாறு பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெளிமான்கள் அதிக அளவில் நடமாடுவதாகவும் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணியில் தெரியவந்துள்ளளது. வனத்துறை ஊழியர்கள் வெளி மான்கள் நடமாட்டத்தை வனவிலங்குகள் கணக்கெடுப்பில் பதிவு செய்துள்ளனர். புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வெளி மான்களை வேட்டையாடி உண்பது வழக்கம். எனவே வெளி மான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். அரிய வகை மான் இனமாக கருதப்படும் வெளிமான்களின் எண்ணிக்கை தெங்குமரஹடா வனப்பகுதியில் அதிகம் உள்ளதால் வனத்துறையினர் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.