அசாமில்.. தாலிபான்களை ஆதரித்து சமூகவலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட 14 பேர் கைது!
கவுகாத்தி: அசாமில் தாலிபான்களை ஆதரிக்கும் வகையில் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்த 14 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தியாவில் தாலிபான்கள் இயக்கம் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாகும்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த நிலையில் ஆப்கான் அரசையும், ராணுவத்தையும் அதிரடியாக வீழ்த்தி தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.
தாலிபான்கள் உள்ளே புகுந்தவுடன் ஆப்கான் முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ஆப்கானில் இருந்து தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர்.

ஆப்கான் விவகாரம்
உயிர் பிழைப்பதற்காக காபூல் விமான நிலையத்தில் ஏரளாமான மக்கள் கூடியிருக்கும் நிலையில் அமெரிக்க படைகள் பாதுகாப்புக்காக நின்றிருந்து மக்களை வெளியேற்றி வருகின்றன. இந்தியாவும் ஆப்கானில் சிக்கி இருக்கும் மக்களை தொடர்ந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஆப்கான் விவகாரத்தை பொறுத்தவரை இந்தியா இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

14 பேர் கைது
இந்தியாவில் தாலிபான்கள் இயக்கம் பயங்கரவாத இயக்க பட்டியலில் தடை செய்யப்பட்டு இருப்பதால் தாலிபான்களுக்கு ஆதரவாக பேசினாலோ அல்லது தாலிபான்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டாலோ போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தாலிபான்களை ஆதரித்ததற்காக அசாமில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் கருத்து
அசாமின் 11 மாவட்டங்களை சேர்ந்த இந்த 14 பேரும் சமூக வலைத்தளங்களில் தாலிபான்களுக்கு ஆதரவாக பேசியுள்ளனர். இதில் ஒரு மருத்துவ கல்லூரி மாணவரும் உள்ளார் என்று அசாம் போலீஸ் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். சிலர் நேரடியாக தலிபான்களை ஆதரித்தாலும், அவர்களில் சிலர் ''இந்தியா மற்றும் தேசிய ஊடகங்கள் தலிபான்களை ஆதரிக்கவில்லை. தாலிபான்களுக்கு எதிராக நிற்கின்றனர் என்று பதிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் எச்சரிக்கை
தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் தாலிபான்களுக்கு ஆதரவான கருத்துகள் தெரிவிப்பதற்கு எதிராக அசாம் காவல்துறை கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்தகைய நபர்கள் மீது நாங்கள் கிரிமினல் வழக்குகளை பதிவு செய்கிறோம். இதுபோன்ற ஏதாவது கவனத்திற்கு வந்தால் போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும்'' என்று மூத்த போலீஸ் அதிகாரி வயலட் பாருவா கூறினார்.

தேசத்துரோக வழக்கு
''ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்தபோது, 'முழு நாடும் சுதந்திரத்திற்காக போராடியது'. தற்போது தலிபான்கள் அவர்கள் நாட்டை சுதந்திரம் பெற வைத்திருக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் அவர்களே ஆள வேண்டும் என கருதுகின்றனர். அவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புகிறார்கள். இது அவர்களின் தனிப்பட்ட விஷயம். இதில் நாம் எப்படி தலையிட முடியும்? இதில் என்ன தவறு இருக்கிறது?'' என்று தாலிபான்களுக்கு ஆதரவாக பேசிய உத்தர பிரதேச சமாஜ்வாதி கட்சி எம்.பி சபிக்குர் ரஹ்மான் பார்க் மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications