பிறந்த நாள் பார்ட்டியில் சகமாணவர்களால் மாணவி கூட்டு பலாத்காரம்... வீடியோ எடுத்து மிரட்டல்!
ஹைதராபாத்தில் பிறந்தநாள் விழாவிற்கு சென்ற மாணவியை சீரழித்தோடு, அதனை வீடியோவாக எடுத்து சக மாணவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஹைதராபாத்: ஆந்திரா மாநிலம் கமாம் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் நண்பரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க சென்ற போது சக மாணவர்கள் கூட்டு பலாத்காரம் செய்து சீரழித்துள்ளனர். அதை வீடியோவாக பதிவு செய்து மிரட்டியுள்ளனர்.
ஹைதராபாத்தின் கமாம் பகுதியை 17 வயது கல்லூரி மாணவி நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடந்த ஞாயிறுக்கிழமை சென்றுள்ளார். அப்போது நிகழ்ச்சி நடந்த இடத்தில் சக மாணவர்கள் மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கமாம் பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில், நண்பரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக சென்றேன். அப்போது என்னுடன் பயிலும் 4 மாணவர்கள் என்னை பலாத்காரம் செய்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்
வீடியோ எடுத்து மிரட்டல்
பலாத்காரம் செய்ததோடு நின்றுவிடாமல் இந்த நிகழ்வு அனைத்தையும் வீடியோப் பதிவும் செய்துள்ளனர். இங்கு நடைபெற்ற சம்பவத்தை வெளியில் சொல்லக் கூடாது என்றும் மிரட்டல் விடுத்தனர்.
நியாயம் கோரி வழக்கு
எனினும் எனக்கு நேர்ந்த கொடுமைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே வழக்கு பதிவு செய்துள்ளேன் என்றும் பாதிக்கப்பட்ட மாணவி கூறியுள்ளர். பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் பேரில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் உள்பட பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றாவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
நிர்பயா
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் கொடூரமான முறையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேருக்கும் மே மாதம் மரணதண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
மரண தண்டனை
கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் நிலையிலும் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. இதையே எடுத்துக் காட்டுகிறது ஹைதராபாத்தில் நடந்துள்ள இந்த கூட்டு பலாத்கார சம்பவம்.
வளர்ப்பில் மாற்றம் வேண்டும்
பெண் குழந்தைகளை மட்டுமே குற்றம் சொல்லும் இந்த சமூகம், ஆண் பிள்ளைகளை சரியான முறையில் வளர்க்காததும் இது போன்ற அவலங்களுக்கு காரணமாக அமைகின்றன. பெண்களின் ஆடை நாகரீகத்தில் குறை சொல்லும் அதே சமயம், சக மாணவர்களாலேயே மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது இந்த சமூகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான எச்சரிக்கையாகவே இந்த சம்பவத்தை பார்க்க வேண்டியுள்ளது.