1971-ல் இந்தியா- பாக். யுத்தத்தின் 'ஹீரோ' லெப். ஜெனரல் ஜேக்கப் காலமானார்!
டெல்லி: 1971-ம் ஆண்டு யுத்தத்தில் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட, போரின் நாயகனாக புகழாரம் சூட்டப்பட்ட லெப். ஜெனரல் ஜே.எப்.ஆர். ஜேக்கப் உடல்நலக் குறைவால் டெல்லியில் நேற்று காலமானார். அந்த 1971-ஆம் ஆண்டு யுத்த வெற்றியால்தான் வங்கதேசம் தனிநாடாக உருவெடுத்தது. இதனால் வங்கதேசமும் லெப்.ஜெனரல் ஜேக்கப் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வங்காள மாகாணத்தில் யூத குடும்பத்தில் பிறந்தவர் ஜேக்கப். தம்முடைய 19 வயதில் அதாவது 1942ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் கால கட்டத்தில் ராணுவத்தில் இணைந்தார். பின்னர் 1965ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் யுத்தத்திலும் பங்காற்றினார்.

1971ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் கிழக்கு பிராந்திய கமாண்டராக இருந்தார் ஜேக்கப். அப்போதுதான் வங்கதேச விடுதலைக்காக இந்தியா- பாகிஸ்தான் இடையேயான யுத்தம் நடைபெற்றது.
அந்த யுத்தத்தின் போது டாக்காவில் சரணடைந்த பாகிஸ்தானிய படையினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியவர் லெப். ஜெனரல் ஜேக்கப். தங்களுடைய நாட்டு விடுதலைக்காக தீரமுடன் போரிட்ட லெப்.ஜெனரல் ஜேக்கப்பட்டு வங்கதேசம் அந்நாட்டின் உயரிய விருதை வழங்கி சிறப்பித்திருந்தது.

1978-ஆம் ஆண்டு ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஜேக்கப், கோவா, பஞ்சாப் மாநிலங்களின் ஆளுநராகவும் பதவி வகித்தார். 92 வயதான லெப். ஜெனரல் நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வங்கதேசமும் அஞ்சலி
தங்களது தேச விடுதலைக்கான போரில் தீரமுடன் பங்காற்றிய லெப். ஜெனரல் ஜேக்கப் மறைவுக்கு வங்கதேசம் ஆழ்ந்த அஞ்சலியையும் இரங்கலையும் தெரிவித்துள்ளது. அந்நாட்டு அதிபர் அப்துல் ஹமீத், பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications