அருணாச்சல்: ஊடுருவிய சீனா- உக்கிரமாக தடுத்து நிறுத்திய சீக்கிய, ஜாட் ரெஜிமெண்ட்ஸ்- பரபர தகவல்
இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் ஊடுருவிய சீன ராணுவத்தினரை நமது ராணுவத்தின் சீக்கிய மற்றும் ஜாட் ரெஜிமெண்ட் படைகள் தடுத்து நிறுத்தியதாகவும் நமது தரப்பில் 20 வீரர்களுக்கு படுகாயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அருணாச்சல பிரதேச மாநில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் தொகுப்பு: அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் 200க்கும் அதிமான சீன ராணுவத்தினர் டிசம்பர் 9-ந் தேதி ஊடுருவி ஆக்கிரமிக்க முயன்றனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டது.
அருணாச்சல பிரதேசத்தில் வேலையை காட்டிய சீனா.. நாடாளுமன்றத்தில் வரிந்து கட்ட போகும் எதிர்க்கட்சிகள்!
சீக்கிய, ஜாட் ரெஜிமெண்ட்ஸ்
இந்திய ராணுவத்தின் சீக்கிய, ஜாட் ரெஜிமெண்ட் பிரிவினரே சீன ராணுவத்தினரை தடுத்து நிறுத்தினர். சீன ராணுவத்தினரின் தாக்குதலுக்கு பதிலடியும் கொடுத்தனர். இதில் நமது வீரர்கள் 20 பேர் படுகாயமடைந்தனர். 6 ராணுவ வீரர்கள் ஆபத்தான நிலையில் அஸ்ஸாமிக் குவஹாத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிசம்.10-ல் பேச்சுவார்த்தை
இச்சம்பவத்தைத் தொடர்ந்து இருதரப்பு இடையே டிசம்பர் 10-ந் தேதி பூம்லா என்ற இடத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் தற்போது இருதரப்பும் மோதல் நிகழ்விடத்தில் இருந்து படைகளை விலக்கிக் கொண்டு தங்களது எல்லைகளுக்கு திரும்பி உள்ளனர் என ராணுவம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அருணாச்சல பிரதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
கால்வன் மோதல்
கடந்த 2020-ம் ஆண்டு லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் சீனா ஊடுருவி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நிகழ்ந்துள்ள 2-வது பெரிய சம்பவம் இது. கால்வன் பள்ளத்தாக்கு மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலில் சீனா தரப்பில் பெருமளவு இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
டோக்லாம் மோதல்
முன்னதாக பூட்டானின் டோக்லாம் பீடபூமியை ஆக்கிரமிக்க சீனா முயன்றது. டோக்லாம் பீடபூமியானது இந்தியாவுக்கு பாதுகாப்பு அடிப்படையில் முக்கியமானது. அதனால் டோக்லாம் பாதுகாப்பில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வந்தது. டோக்லாமை ஆக்கிரமிக்க சீனா முயன்ற போது இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இருதரப்பு இடையே கைகலப்பு மோதல் நடந்தது. டோக்லாம் பீடபூமியை கைப்பற்றிவிட்டால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்குள் எளிதாக நுழைந்துவிடலாம் என்பது சீனாவின் வியூகம். இந்த வியூகத்தை நமது ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்திருந்தனர். இந்த நிலையில்தான் இன்று நேரடியாக அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாருக்கு குறிவைத்திருக்கிறது சீனா என்பது குறிப்பிடத்தக்கது.