மீரட் பொருட்காட்சி தீவிபத்து – நீதிபதி சின்ஹா தலைமையில் ஒரு நபர் கமிஷன்
டெல்லி: உத்தர பிரதேச மாநில மீரட் நகரில் நடைபெற்ற தீவிபத்து குறித்த விரிவான விசாரணைக்கு நீதிபதி தலைமையிலான ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டையே உலுக்கிய கும்பகோணம் பள்ளியில் நடைபெற்ற தீவிபத்தினைப் போலவே இந்தியாவையே அதிரவைத்த மற்றொரு விபத்து, மீரட் நகரில் நடைபெற்ற தீவிபத்தாகும்.
2006 ஆம் ஆண்டு மீரட்டில் அமைந்துள்ள விக்டோரியா பூங்காவில் வர்த்தகப் பொருட்காட்சி ஒன்று நடைபெற்றது. அப்பொருட்காட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 60 க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தீ விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி எஸ்.பி சின்ஹா தலைமையில் ஒரு நபர் கமிஷனை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
மேலும், உ.பி அரசு இடைக்கால நிவாரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 2 லட்சமும் உதவித்தொகையாக வழங்கவும் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த குழு 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதிக்குள் தங்கள் அறிக்கையை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளது.