கலைஞர் டிவி பண விவகாரம்: தயாளு, கனிமொழி. ராசா உட்பட 19 பேருக்கு கோர்ட் சம்மன்!!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் டிவிக்கு பணம் கைமாறியது தொடர்பாக அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீது விசாரணை நடத்திய டெல்லி நீதிமன்றம் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், கருணாநிதி மகன் கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உட்பட 19 பேர் மே 26-ந் தேதி ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கை சிபிஐ டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடத்தி வருகிறது. ஸ்வான் டெலிகாம் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடை முறைகேடு பெற்றதற்கு பிரதிபலனாக கலைஞர் டிவிக்கு ரூ200 கோடி கொடுத்தது என்பதும் ஒரு புகார்.
இந்த ரூ200 கோடி கலைஞர் டிவிக்கு கை மாறியதில் அன்னிய செலாவணி விதிகள் மீறப்பட்டிருப்பதாக கூறி அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் தயாளு அம்மாள், கனிமொழி, ஆ.ராசா, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் ஷாகித் பல்வா, வினோத் கோயங்கா உட்பட 19 பேர் மீது டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், ஸ்வான் நிறுவனத்திடம் இருந்து ரூ200 கோடியை கலைஞர் டிவி கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் ஆ. ராசாவை விசாரணைக்கு அழைத்த உடனேயே இந்த ரூ200 கோடி ஸ்வான் நிறுவனத்திடம் தரப்பட்டிருக்கிறது. இந்த பணத்தை திருப்பித் தந்த காலம்தான் சந்தேகத்துக்குரியது என்று நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு வாதிட்டது.
இந்நிலையில் இந்தக் குற்றப்பத்திரிகையை ஏற்பது தொடர்பாக இன்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது தயாளு அம்மாள், கனிமொழி, ஆ.ராசா, ஷாகித் பல்வா, வினோத் கோயங்கா உட்பட 19 பேர் வரும் 26-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டது.