15 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு..சிசிடிவி கேமராக்கள் உடைப்பு.. மே.வங்கத்தில் என்னதான் நடக்கிறது?
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் பர்கானாஸ் நகரில் 15 இடங்களில் நேற்றிரவு மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசியதில், ஒரு குழந்தை உட்பட மூவர் காயமடைந்தனர்.
மேற்கு வங்கத்தில் அடுத்த வாரம் சட்டசபை தேர்தல் தொடங்குகிறது. தேர்தல் பணிகளை அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
இந்தத் தேர்தலில் மீண்டும் வென்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் திரிணாமுல் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. அவர்களுக்கு எதிராக பாஜகவும் அதே வேகத்தில் களமிறங்கியுள்ளதால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல குண்டு
இந்நிலையில், மேற்கு வங்கத்தின் பர்கானாஸ் நகரில் 15 இடங்களில் அடையாளம் தெரியா நபர் ஒருவர் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார். இதில் ஒரு குழந்தை உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்ட்பாரா நகராட்சிக்கு உட்பட 15 இடங்களில் வெடிகுண்டுகள் வீசப்பட்டதாகவும், பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களும் உடைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் முன்னிலையில்
அப்பகுதியில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைவில் சென்றனர். இருப்பினும் அப்பகுதி மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், போலீசார் முன்னிலையிலேயே ஒரு இடத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும் அதைத் தடுக்க அவர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடவடிக்கை இல்லை
இருப்பினும், இதில் ஈடுபட்டவர்கள் யார் என்பதும், இதற்கான காரணம் குறித்தும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த தாக்குதல் சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டவுடன் பராக்பூர் பாஜக எம்.பி. அர்ஜுன் சிங் சம்பவ இடத்திற்கு வந்தார். கடந்த 10 நாட்களாகவே அப்பகுதியில் அச்சுறுதல் நிலவுவதாகவும் இது குறித்துக் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
திரிணாமுல் ரவுடிசம்
இருப்பினும், ஆளுங்கட்சியினரின் உத்தரவு காரணமாக போலீசார் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் ரவுடிசத்தை அடக்க வேண்டும் என்றும் மேற்கு வங்கத்தில் பொதுமக்கள் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.