கோயில் கொடியை எரித்து மதக்கலவரத்தை உருவாக்க திட்டம்.. சங்பரிவார் அமைப்பினர் கைது
பெங்களூர்: மத கலவரம் ஏற்படுத்தும் நோக்கத்தில் கோயிலில் பறந்த காவிக் கொடியை தாங்களே எரித்த சங்பரிவார் அமைப்பை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நகரிலுள்ள நாயக்கர் வீதியிலுள்ள பிரபல விநாயகர் கோயிலில் பறந்து கொண்டிருந்த காவி கொடியை சம்பவத்தன்று நள்ளிரவில் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ், மஞ்சு மற்றும் பங்காரா ஆகியோர் கீழே இறக்கி எரித்துள்ளனர்.
மாற்று மதத்தவர்கள் கொடியை எரித்துவிட்டதாக கூறி மத கலவரத்தை உருவாக்குவது இவர்கள் நோக்கம் என்று தெரிகிறது. இருப்பினும் அவர்கள் முயற்சி பலிக்கவில்லை. சங்பரிவார் அமைப்பை சேர்ந்த இவர்கள்தான் கொடியை எரித்தது என்று கண்டுபிடித்த போலீசார் மூவரையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கைதானவர்கள் உறவினர்களும், அண்டை வீட்டுக்காரர்களும் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, அப்பாவிகளை கைது செய்துவிட்டதாக கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.