பொன்விழா 'டிரான்ஸ்பரை' நோக்கி 'ஹரியானா சகாயம்' கெம்கே...45 வது முறை இடமாற்றம்!!
சண்டிகர்: அரசாங்கத்தின் ஊழல்களை அம்பலப்படுத்தி வருகிறார் என்ற ஒரே காரணத்துக்காக ஹரியானா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கே 45வது முறையாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஹரியாணா மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நில கொள்ளைகளை அம்பலப்படுத்திய ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா. அந்த நில ஒப்பந்தங்களை ரத்து செய்யவும் உத்தரவிட்டார்.
இதனால் அவர் பந்தாடப்பட்டார். பல்வேறு துறைகளுக்கு மாற்றியடிக்கப்பட்டார். இந்நிலையில் ஹரியானாவில் பாரதிய ஜனதா அரசு பொறுப்பேற்றது. முதல்வராக மனோகர்லால் கட்டார் பொறுப்பேற்றார்.
தற்போது மீண்டும் அசோக் கெம்கா உட்பட 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்துத் துறை ஆணையர் மற்றும் செயலாளராக இருந்த கெம்கா, தொல்லியல் மற்றும் அருங்காட்சியக துறைக்கு திடீரென தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.
Tried hard to address corruption and bring reforms in Transport despite severe limitations and entrenched interests. Moment is truly painful
— Ashok Khemka, IAS (@AshokKhemka_IAS) April 1, 2015
இதுகுறித்து கெம்கா ட்விட்டரில், போக்குவரத்துத் துறையில் ஊழலை ஒழிப்பதற்காக கடுமையாக முயற்சித்து வந்தேன். கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் இத்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டேன். இந்த நிலையில் என்னை வேறு துறைக்கு மாற்றி இருப்பது உண்மையிலேயே மன வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் கூறும்போது, காங்கிரஸ் தலை மையிலான முந்தைய ஆட்சியில் ஊழலை அம்பலப்படுத்தியவர் கெம்கா. அவருக்கு எப்போதுமே எனது ஆதரவு உண்டு. அவரை பணியிட மாற்றம் செய்தது குறித்து முதல்வரிடம் பேச உள்ளேன் என்றார்.
ஆனால் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் விலாஸ் சர்மாவோ, மூத்த அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வது என்பது தண்டனை அல்ல. அது ஒரு வழக்கமான நடைமுறைதான். அமைச்சரவையின் ஒப்புதல் படிதான் இந்த மாற்றம் செய்யப் பட்டது என்கிறார்.
22 ஆண்டுகளாக நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் கெம்கா இதுவரை 45 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எந்த ஒரு பதவியிலும் சில மாதங்களுக்கு மேல் நீடித்ததில்லை.