கணக்கிடப்படாத 61 ஆயிரம் கொரோனா மரணங்கள்.. குஜராத்தில் பத்திரிகை செய்தியால் பரபரப்பு
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் 61 ஆயிரம் பேரது மரணங்கள் கணக்கிடப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் இந்தியா முழுவதும் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதோடு உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மார்ச் 1 முதல் மே 10 ஆம் தேதி வரை கூடுதலாக 61 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்கள் என குஜராத் மாநில செய்தித்தாளில் செய்தி வெளியானது.
மேற்கண்ட காலகட்டத்தில் கடந்த ஆண்டு 58 ஆயிரம் இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அதே காலத்தில் 1,23,871 இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 33 மாவட்டங்கள், 8 முக்கிய நகரங்களை அடிப்படையாக கொண்டு இந்த தகவல்கள் எடுக்கப்பட்டன.
மார்ச் 1 முதல் மே 10 வரை 33 மாவட்டங்களிலும் கொரோனாவால் உயிரிழந்தோர் 4,218 பேருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த செய்தியை மேற்கோள்காட்டி குஜராத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் அறிக்கை கேட்டுள்ளது.
4-வது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்புகளை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை உயர்வு- மத்திய அரசு
குஜராத்தில் நேற்றைய நிலவரப்படி 9,995 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அது போல் 104 பேர் கொரோனாவால் மரணமடைந்தனர். இதனால் மாநிலத்தில் இதுவரை 7.35 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 8,944 பேர் இறந்துள்ளனர்.