பிறந்து 21 நாட்களே ஆன சிசுவின் வயிற்றில் 7 கருக்கள்.. வியந்து போன மருத்துவர்கள்.. எப்படி நடந்தது?
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்து 21 நாட்களே ஆன குழந்தையின் வயிற்றில் 7 கருக்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இவை அனைத்தும் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளன. இம்மாதிரியான சம்பவங்கள் 5 லட்சத்தில் ஒருவருக்குதான் ஏற்படும் என மருத்துவ உலகம் கூறுகிறது.
இந்த கரு எப்படி உருவானது? அதற்கான காரணம் என்ன? போன்றவை குறித்தும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் விளக்கியுள்ளனர்.
ஆகஸ்ட்டில் தான் விருது வழங்கினேன்.. தமிழறிஞர் நெடுஞ்செழியன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
கட்டி
மனித இனத்தில் சில அபூர்வ நிகழ்வுகள் நடப்பதுண்டு. அதில் ஒன்றுதான் மேற்குறிப்பிட்ட சம்பவம். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராமகர் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 21 நாட்களுக்கு முன்னர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பின்னர் ஓரிரு நாட்களில் அவர்கள் வீடு திரும்பி விட்டனர். ஆனால் சம்பந்தமே இல்லாமல் குழந்தை திடீர் திடீரென அழுதுகொண்டே இருந்துள்ளது. இது தொடர்பாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் பரிசோதித்துள்ளனர். பரிசோதனையில் குழந்தையின் வயிற்றில் கட்டி இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
கரு
முதலில் ஒரு கட்டி இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் மற்றொரு பரிசோதனையில் இரண்டாவது கட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நீர் கட்டியாக இருக்கலாம் என்று சந்தேகித்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டனர். இதனையடுத்து கடந்த 1ம் தேதி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. பின்னர் இது குறித்து சில தகவல்கள் வெளியாகின. அதாவது குழந்தையின் வயிற்றில் இருந்தது நீர் கட்டி இல்லையென்றும் அது, கரு என்றும் சொல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் டி.இம்ரான், "குழந்தையின் வயிற்றில் இரண்டு நீர் கட்டி இருக்கிறது என்றுதான் அறுவை சிகிச்சையை தொடங்கினோம்.
அறுவை சிகிச்சை
ஆனால் வயிற்றில் 7 கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கட்டிகளை அகற்றும்போது சிலவற்றை கவனித்தோம் அப்போதுதான் இது நீர் கட்டி அல்ல, இது கரு என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. இது ஒரு அபூர்வமான நிகழ்வு. உலகில் இதுவரை இப்படி இத்தனை கருக்கள் 21 நாட்களே ஆன சிசுவின் வயிற்றிலிருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதே முதல்முறை. இதனை மருத்துவ மொழியில் foetus-in-fetu (FIF) என்று சொல்லுவார்கள். இந்த பாதிப்பு 5 லட்சத்தில் ஒருவருக்குதான் ஏற்படும்.
காரணம்
சிசுவின் முதுகெலும்பில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கரு தவறாக சிசுவின் வயிற்றுக்குள் சென்றிருக்கிறது. தற்போது அனைத்து கருக்களும் அகற்றப்பட்டுள்ளன. குழந்தையும் நலமாக இருக்கிறது. வழக்கமாக கொடுக்கப்படும் பால் மற்றும் நீராகாரங்களை குழந்தை எடுத்துக்கொள்கிறது. இந்த பாதிப்பால் குழந்தையின் எதிர்காலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் சில மாதங்கள் வரை தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும். இவ்வாறு 7 கருக்கள் 21 நாட்களே ஆன சிசுவின் உடலில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது உலகில் இதுதான் முதன் முறை என்பதால் இது குறித்து அறிக்கையை விரைவில் சர்வதேச குழந்தை மருத்துவ இதழில் வெளியிட உள்ளேன். அதில் மற்ற விவரங்கள் விரிவாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
இதேபோல
குழந்தையின் பெற்றோர் ஏழை குடும்பத்தை சார்ந்தவர் என்பதால் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்று ஏற்கெனவே ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. அதாவது, சில நாட்களுக்கு முன்னர் பீகார் மாநிலத்தின் மோதிஹாரியில் பிறந்து 40 நாட்கள் ஆன சிசுவின் வயிற்றில் இதே போன்று கரு இருந்திருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் கரு அகற்றப்பட்டு குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது. பிறந்து 21 நாட்களே ஆன சிசுவின் வயிற்றில் 7 கருக்கள் இருந்த சம்பவம் மருத்துவ உலகு மட்டுமல்லாது அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.