புதுக்கட்சி தொடங்கினார் முன்னாள் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி
ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா தனிமாநிலமாக உருவாக்கப் படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தார் அம்மாநில முதல்வரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிரண்குமார் ரெட்டி.
ஆனால், எதிர்ப்புகளையும் மீறி கடந்த மாதம் 19ம் தேதி தெலுங்கானா குறித்தான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி.
தெலுங்கானா பிரச்சினைக்காக நீதிமன்ற உதவியை நாடிய கிரண்குமார் நேற்று புதுக்கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிரண்குமார் ரெட்டி கூறியதாவது:-
ஆந்திரத்தை மத்திய அரசு பிரித்த விதத்தால் தெலுங்கு பேசும் மக்களின் கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநில மக்களின் சுயமரியாதையை நிலைநிறுத்தும் வகையில், புதிய கட்சியை நாங்கள் தொடங்குகிறோம். புதுக் கட்சியின் கொள்கைகளும் திட்டங்களும் கடலோர ஆந்திரத்தில் உள்ள ராஜமுந்திரி நகரில் வரும் 12ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும்.
சீமாந்திர தேர்தல் களத்தைச் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆந்திர மாநிலத்தை சுமார் 9 ஆண்டு காலம் ஆட்சி செய்த சந்திரபாபு நாயுடுவால் மாநிலம் ஒற்றுமையாக இருப்பதற்குக் குரல் கொடுக்க இயலவில்லை. இது அவமானகரமானது.
ஒருமித்த ஆந்திரத்தையே தாங்கள் ஆதரிப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி காட்டிக் கொண்டாலும், மாநிலம் பிரிக்கப்படுவதையே அவர் உண்மையில் ஆதரிக்கிறார். அப்போதுதான் சீமாந்திரத்தில் முதல்வராக முடியும் என்று அவர் கணக்கு போடுகிறார்' என இவ்வாறு அவர் கூறினார்.
தனது புதுக் கட்சி அறிவிப்பை ஹைதராபாதில் கிரண்குமார் ரெட்டி வெளியிட்ட போது அவருடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சில எம்.பி.க்களும் உடன் இருந்தனர்.