காதலியை பார்க்க சென்ற அக்சஞ்சர் நிறுவன சாப்ட்வேர் இன்ஜினியர் குத்திக் கொலை.. பெங்களூரில் பயங்கரம்
பெங்களூர்: பெங்களூரிலுள்ள அக்சஞ்சர் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்த இளைஞர், தனது காதலியை சந்திக்க சென்றபோது மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
ஒடிசாவை சேர்ந்தவர் பிரனாய் மிஸ்ரா (28). பிடெக் படித்த இவர் 2014ல் பெங்களூர் வந்தார். கடைசியாக அவர் அக்சஞ்சர் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, பேகூரிலுள்ள நண்பர் ஒருவர் வீட்டில் நடந்த பார்ட்டியில் இவர் பங்கேற்றுள்ளார்.
காதலிக்கு போன்
இதன்பிறகு, திங்கள்கிழமை அதிகாலை சுமார் 2.30 மணியளவில், தான் தங்கியிருந்த தாவரகெரே (ஃபோரம் மால் அருகேயுள்ள தாவரகெரே) பகுதிக்கு வந்தார். அங்கு வந்ததும், அதே பகுதியில் உள்ள மகளிர் 'பிஜி' ஒன்றில் தங்கியிருந்த தனது காதலியை செல்போனில் அழைத்துள்ளார்.
அதிகாலை சந்திப்பு
இன்னும் சில நிமிடங்களில் உன்னை பார்க்க வருவேன், ரெடியாக இரு என்று பிரனாய் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதன்பிறகு தனது பைக்கில் தாவரகெரே ரோட்டிலுள்ள சாக்லேட் பேக்டரி பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் சரமாரியாக பிரனாய் மிஸ்ராவை கத்தியால் குத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து முடிந்த அளவுக்கு பிரனாய் தப்பியோடியுள்ளார். ஆனால் அவர் சரிந்து விழும்வரை தொடர்ந்து அந்த நபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.
போலீசார் வழக்குப்பதிவு
பிரனாய் மிஸ்ரா ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் அவரை அருகேயுள்ள செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கி சென்றுள்ளனர். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மடிவாளா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
காதலியிடம் விசாரிக்க முடிவு
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சம்பவ இடத்தை சுற்றிலுமுள்ள கட்டிடங்களில் நிறையவே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதை ஆய்வு செய்து வருகிறோம். பிரனாயின் காதலிக்குதான் அவர் அந்த இடத்திற்கு வருவது தெரியும். எனவே காதலியிடம் தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார். பர்ஸ், வாட்ச் உட்பட பிரனாய் உபகரணங்கள் அப்படியே உள்ளன என்பதால் இது திருட்டுக்காக நடந்த கொலையாக இருக்காது என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஆண், பெண் ஐடி ஊழியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.