சாலையில் நடக்கும் பெண்கள் மொபைலில் பேசினால் அபராதம்... உ.பி கிராமத்தில் வருகிறது வினோத சட்டம்
சாலையில் நடக்கும் பெண்கள் மொபைலில் பேசினால் அபராதம் என உத்தர பிரதேச கிராமம் ஒன்றில் சட்டம் அமலாகியுள்ளது.
லக்னோ: சாலையில் நடக்கும் பெண்கள் மொபைலில் பேசினால் அபராதம் என உத்தர பிரதேச கிராமம் ஒன்றில் சட்டம் அமலாகியுள்ளது. மதுரா மடோரா என்ற கிராமத்தில் வந்திருக்கும் இந்த புதிய சட்டம் அங்கு பெரிய அளவில் பிரச்சனைகளை உருவாக்கி இருக்கிறது.
இதில் பல திட்டங்கள் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத்தை கவரும் வண்ணம் கொண்டு வரப்பட்டு உள்ளது. யோகியின் கனவை நிறைவேற்றவே இந்த சட்டங்கள் கொண்டுவரப்படுவதாக கூறப்படுகிறது.
மதுகுடித்தல், மாட்டுக்கறி உண்ணுதல், மொபைல் பயன்படுத்துதல் குறித்து நிறைய வினோதமான சட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது.
ராம ராஜ்ஜியம் வேண்டும்
உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் மதுரா மடோரா என்ற கிராமத்தில் சமீப காலமாக நிறைய புதிய சட்டங்கள் கொண்டுவரப்படுகிறது. அங்கு இருக்கும் பஞ்சாயத்து நிர்வாகிகளால் இந்த சட்டங்கள் அமல்படுத்தபட்டுள்ளது. இது அந்த மாநிலம் முழுக்க கொண்டு வரப்பட வேண்டும் என அந்த கிராம நிர்வாகிகள் கூறுகின்றனர். மேலும் ராம் ராஜ்ஜியம் அமைக்கவே இந்த சட்டங்கள் கொண்டு வரப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மாட்டுக்கறிக்கு நோ
அதன்படி இனி அந்த கிராமத்தில் மாட்டுக்கறி உண்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் என கூறப்பட்டுகிறது. மாட்டுக்கறி உண்பது மட்டும் இல்லாமல் மாடுகளை கடத்துவது, மாடுகளை அனுமதி இல்லாமல் விற்பது, மாடுகளை அவமதிப்பது என எந்த விதமான செயலில் ஈடுபட்டாலும் அதற்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். இதை கண்காணிப்பதற்காக அந்த பஞ்சாயத்து நிர்வாகம் சில நபர்களை பணிக்கு அமர்த்தி இருக்கிறது.
மது பர்ஸுக்கு கேடு விளைவிக்கும்
அதேபோல் இந்த கிராமத்தில் மது குடிப்பதற்கு எதிராகவும் சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதன்படி இனி அந்த கிராமத்தில் மது குடித்தால் 1.11 லட்சம் அபராதம் என்று கூறப்பட்டுள்ளது. வெளியில் மட்டும் இல்லாமல் வீட்டுக்கு உள்ளேயும் மது குடிக்க அனுமதி கிடையாது. மேலும் மது குடித்தவர்கள் அந்த ஊருக்குள் நுழையவும் அனுமதி இல்லை.
மொபைல் போனில் பேசக்கூடாது
இந்த நிலையில் மதுரா மடோரா கிராமத்தில் இன்னொரு முக்கியமான சட்டமும் கொண்டுவரப்பட்டு உள்ளது. அதன்படி சாலையில் பெண்கள் இனி மொபைல் போன் பயன்படுத்த கூடாது என்று கூறியுள்ளது. அதையும் மீறி சாலையிலும், பஸ் ஸ்டாண்டிலும் மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு 21,000 அபராதம் என்று கூறியிருக்கிறது. இது பெண்களுக்கு ஒழுக்கத்தையும் பாதுகாப்பையும் கொடுக்கும் என அந்த கிராம நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.