டெல்லி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ மகேந்திர யாதவ் வன்முறைக்கு தலைமை தாங்கியதாக கைது
டெல்லி: டெல்லியில் மேலும் ஒரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. வன்முறை சம்பவத்திற்கு தலைமை தாங்கியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் விகாஸ்புரி எம்.எல்.ஏ மகேந்திர யாதவ், வன்முறை மற்றும் அரசு ஊழியரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.டெல்லியில் மூன்று வயது பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதையடுத்து குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி நிகார் விகார் பகுதியில் பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மகேந்திர யாதவ் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அரசு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. ஒரு வாகனத்தை தீ வைத்து எரிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து எம்.எல்.ஏ மகேந்திர யாதவை கைது செய்தனர். டெல்லியில் கைது செய்யப்படும் 6 ஆவது ஆம் ஆத்மி எம்.எல்.ஏ இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கைது நடவடிக்கை தொடர்பாக காவல்துறை இணை கமிஷனர் தேவேந்திர பதக் கூறுகையில், "வன்முறை, தீ வைத்தல், அரசு ஊழியரை தாக்குதல், பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு எம்.எல்.ஏவை கைது செய்துள்ளோம். போராட்டக்காரர்களை சமாதானம் செய்ய முயன்றபோது காவல்துறையினருடன் அவர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.
இவர்களின் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளியை கைது செய்துவிட்டோம். ஆனால், காவல்துறை கைது செய்ய மறுத்துவிட்டதாக வதந்தி பரவியதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக எம்.எல்.ஏ.வை கைது செய்ததுடன் பலரிடம் விசாரித்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை ஒருநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்ற 4 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.