மென்மையான முகம் கொண்ட ‘மாவோயிஸ்ட்’ கெஜ்ரிவால்: பாஜக
டெல்லி: ஆம் ஆத்மி கட்சிதலைவர் கெஜ்ரிவால் மென்மையான முகம் கொண்ட மாவோயிஸ்ட் என பாரதீய ஜனதா கட்சி தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி விமர்சித்துள்ளார்.
குஜராத் வளர்ச்சியை நேரில் காணப்போவதாக தனது ஆதரவாளார்களோடு அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட முதல்நாளான நேற்றே தேர்தல் விதியை மீரி விட்டதாகக் கூறி அவரைப் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்தில் அவர் வெளியே அனுப்பப் பட்டாலும், தங்களது தலைவரை குஜராத் போலீசார் நடத்திய விதத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக அலுவலகங்கள் முன்பு ஆம் ஆத்மியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், பாஜக - ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்களிடையே மோதல் உண்டானது. இதில் பாஜக அலுவலகம் சூறையாடப்பட்டது. ஐந்து பேர் காயமடைந்தனர். மேலும், 14 ஆம் ஆத்மி தொண்டர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆம் ஆத்மியினரின் செயலுக்காக கெஜ்ரிவால் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். ஆனபோதும், ஆம் ஆத்மியினர் நடந்து கொண்ட விதத்திற்காக பாஜகவினர் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பாஜக தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:-
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மென்மையான முகம் கொண்ட மாவோயிஸ்ட். அவரது கட்சியினர் அராஜகத்தின் மூலம் ஜனநாயகத்தை கடத்த முயற்சிக்கின்றனர். நாட்டில் தேர்தல் குழப்பத்தை ஏற்படுத்துவது வன்முறையின் தூண்டுவதுதான் அவர்கள் வழி. நாட்டின் அமைதியான போக்கை கெடுக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள் ஆபத்தான மனநிலையில் இருக்கும் அவர்கள் சின்னம் அராஜகமாகிவிட்டது என்று நக்வி கூறியுள்ளார்.