குஜராத்: ரூ21,000 கோடி மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின்-சிக்கிய சென்னை சுதாகர்- அதானி குழுமம் விளக்கம்
அகமதாபாத்: குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் ரூ21,000 கோடி மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின் சிக்கிய விவகாரத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது.
குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக 3,000 கிலோ ஹெராயின் (3 டன்) அண்மையில் சிக்கியது. இதன் மதிப்பு ரூ21,000 கோடி எனவும் கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் இருந்து ஈரான் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இந்தியாவுக்கு ஹெராயின் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவின் விஜயவாடா முகவரியின் பெயரில் இந்த ஹெராயின் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடைசி ஓவரில் தேவை 4 ரன்.. கொடுத்தது 1 ரன், எடுத்தது 2 விக்கெட்! ஹீரோ கார்த்திக் தியாகி- வாழ்த்து மழை
விஜயவாடா டூ சென்னை
இதையடுத்து விஜயவாடா முகவரிக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அங்கு நிறுவனம் எதுவும் நடைபெறவில்லை. அந்த வீட்டில் வசித்த வைஷாலி என்பவரிடம் நடத்திய விசாரணையில் அவரது கணவர் சென்னையை சேர்ந்த சுதாகர் என தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரித்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
தீவிரவாதிகளுக்கு தொடர்பா?
கைது செய்யப்பட்ட சுதாகர், வைஷாலி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் போலீசார் அவர்களை காவலில் எடுத்துள்ளனர். அவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் டெல்லியில் வசிக்கும் ஆப்கான் நாட்டைச் சேர்ந்த சந்தேக நபர்கள் சிலரையும் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த ஹெராயின் கடத்தல் விவகாரத்தில் தீவிரவாதிகளுக்கான தொடர்பு குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதானி குழுமம் விளக்கம்
இந்நிலையில் முந்த்ரா துறைமுகத்தை அதானி குழுமம் நிர்வகித்து வருவதால் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தன. இதனைத் தொடர்ந்து அதானி குழுமம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஹெராயின் கடத்தலுடன் எங்கள் குழுமத்தை தொடர்புபடுத்தி பேசுவது உள்நோக்கம் கொண்டது. போதைப் பொருள்களுடன் வந்த கண்டெய்னர்கள் அதிகாரிகளாள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றைத் திறக்கும் அதிகாரம் அதிகாரிகளுக்குதான் உண்டு. எங்களுக்கும் இதற்கும் எந்த தொடர்புமே இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி தலைகள் சிக்குவார்களா?
தற்போதைய நிலையில் சென்னை சுதாகர் ஒரு கருவியாக மட்டுமே இந்த ஹெராயின் கடத்தலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அவருக்கு பின்னணியில் உள்ள சக்திவாய்ந்த கும்பல் யார் என்பது மர்மமாக உள்ளது. அதேநேரத்தில் டெல்லியை சேர்ந்த சில முக்கிய புள்ளிகள்தான் இந்த ஹெராயின் கடத்தலின் பின்னணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த புள்ளிகள் சிக்குவார்களா? அல்லது சென்னை சுதாகருடன் இந்த விவகாரம் ஓய்ந்துவிடுமா? என்பது விரைவில் தெரியவரும்.
தாலிபான்களின் ஏற்றுமதி
இதனிடையே ஹெராயின் ஏற்றுமதி விவகாரத்தில் தலிபான்கள் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. தாலிபான்கள் அண்மையில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய போது போதைப் பொருட்கள் தயாரிப்பை முழுமையாக தடை செய்வோம் என்றனர். ஆனால் கடந்த கால தாலிபான்கள் ஆட்சியில் ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை தயாரிப்பதற்கான அபின் சாகுபடி விளைச்சல் அமோகமாக இருந்தது. உலக நாடுகளின் சட்டவிரோத போதைப் பொருட்களுக்கு பெருமளவு காரணமாக இருப்பது ஆப்கானின் அபின் சாகுபடிதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.