அதிமுக பொதுச் செயலாளர் தேர்வு: சசிகலாவிடம் ஒப்படைக்கப்பட்ட தேர்தல் ஆணைய கடிதம்!
அ.தி.முக. பொதுச் செயலாளர் விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள மனுவிற்கு வருகிற 28-ந்தேதிக்குள் பதில் அளிக்கும்படி சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ் சசிகலாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெங்களூரு: அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட விவகாரம் குறித்து வரும் 28-ஆம் தேதிக்குள் விளக்க அளிக்குமாறு கோரிய தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸானது சிறையில் உள்ள சசிகலாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி மறைந்ததைத் தொடர்ந்து அந்த மாத இறுதியில் கட்சியின் பொதுச் செயலாளராக அவரது தோழி சசிகலாவை கட்சி நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்தனர்.
கட்சியை கைப்பற்றியது அல்லாமல் ஆட்சியையும் கைப்பற்ற வேண்டும் என்பதால் முதல்வராக இருந்த பன்னீர் செல்வத்தை கட்டாயப்படுத்தி ராஜிநாமா செய்யவைத்தார் சசி.
தேர்தல் ஆணையத்திடம் புகார்
இதுதொடர்பான உண்மைகளை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதியின் முன்பு பன்னீர் செல்வம் போட்டு உடைத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
நீக்கம்
இதைத் தொடர்ந்து பன்னீரை அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து நீக்குவதாக சசிகலா அறிவித்தார். மேலும் பன்னீர் அணியில் இணைந்த அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோரின் பதவிகளும் பறிக்கப்பட்டன.
தற்காலிக பொதுச் செயலாளர்
இந்நிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தற்காலிகமாகவே தேர்வு செய்யப்பட்டார். எனவே அப்பதவியானது கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்தே தேர்வு செய்ய வேண்டும் என்பதால் சசிகலாவின் நியமனம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி மைத்ரேயன் எம்.பி. தலைமையில் பன்னீர் அணியினர் தலைமை தேர்தல் ஆணையர் நஜீமை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.
பதில் தராவிட்டால் என்னாகும்?
அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்றது அ.தி.மு.க. சட்டவிதிகளின்படி செல்லாது என்று அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. இந்த மனு குறித்து வருகிற 28-ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பதிலுக்குப் பின் அடுத்த கட்டம்
அதிமுக வக்கீல் பாபு தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் சிறை அதிகாரிகள் மூலம் சசிகலாவிடம் இந்த நோட்டீஸை வழங்கினர். இந்த நோட்டீசுக்கு பதில் தராவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்கும்.