அதானி ஓவர்.. ஹிண்டன்பர்க் அடுத்து வெளியிடும் புது ரிப்போர்ட்! எந்த நிறுவனம் தெரியுமா! பரபர தகவல்
டெல்லி: அதானி நிறுவனம் குறித்து ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு முக்கிய ஆய்வறிக்கை வெளியாகவுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்து முக்கிய தொழிலதிபர் கவுதம் அதானி.. இவர் மின்சாரம், ஏர்போர்ட், துறைமுகம் என்று பல்வேறு துறைகளில் பல நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
இவரது வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக மின்னல் வேகத்தில் இருந்தது. குறிப்பாகத் துறைமுகங்கள் மற்றும் ஏர்போர்ட்களில் இவரது நிறுவனங்களின் வளர்ச்சி கிடுகிடுவென உயர்ந்தது.
ராகுல் லண்டன் பேச்சு & அதானி விவகாரம்! 7ஆவது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்! நாள் முழுக்க ஒத்திவைப்பு
அதானி
இதனால் பல நிறுவனங்களும் அதானி குழுமத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியதால், அதானியின் சொத்து மதிப்புகளும் உயர்ந்தது. ஒரு கட்டத்தில் உலகில் டாப் 2ஆவது பணக்காரராகவும் அதானி இருந்தார். இந்தச் சூழலில் தான் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டது. ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குறித்து சுமார் 2 ஆண்டுகள் ஆய்வு செய்து இந்த ஆய்வறிக்கையை தயார் செய்துள்ளனர். இதில் ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தது.
குற்றச்சாட்டுகள்
சொந்தங்களுக்கே முக்கிய பதவி கொடுக்கப்பட்டது, வரி முறைகேடு, செயற்கையான முறையில் பங்கு விலையை ஏற்றியது. அதிக கடன் என்று அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். மொத்தம் 413 பக்கங்களில் விரிவாக இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை வெளியான உடனே அதானியின் பங்குகள் மதிப்பு மிகக் கடுமையாகச் சரிந்தது. ஒரே வாரத்தில் 50% வரை அதன் மதிப்பு சரிந்தது. இதனால் பங்கு வெளியீட்டையும் அதானி நிறுத்தி வைக்க நேர்ந்தது.
மற்றொரு நிறுவனம்
அப்போது ஏற்பட்ட சரிவில் இருந்து இன்னும் அதானி நிறுவனங்களின் பங்குகள் இன்னுமே மீளவில்லை. இதனால் அதானி நிறுவனங்களுக்கு 120 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் டாப் 35 பணக்காரர்கள் பட்டியலில் இருந்தும் வெளியேறினார். இதனிடையே அதானி நிறுவனத்தைத் தொடர்ந்து மற்றொரு நிறுவனத்தைக் குறிவைத்து ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட உள்ளது.
பரபர அறிவிப்பு
இது குறித்து ஹிண்டன்பர்க் தனது ட்விட்டர் பக்கத்தில், "விரைவில் புதிய அறிக்கை - மற்றொரு பெரிய நிறுவனம்" என்று பதிவிட்டுள்ளனர். இது மற்றொரு இந்திய நிறுவனம் குறித்து இருக்கலாம் என்று ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார். இருப்பினும் அமெரிக்க வங்கிகள் இப்போது அடுக்கடுக்காக பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அதன்படி அமெரிக்க வங்கி ஒன்று குறித்தே இந்த அறிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
எதிர்க்கட்சிகள்
ஹிண்டன்பர்க் அதானி விவகாரம் அரசியல் அரங்கிலும் எதிரொலித்துள்ளது. அதானி விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் இதற்காக நாடாளுமன்ற விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் கார்கே கூறுகையில், "ஒருவரின் சொத்து வெறும் 2.5 ஆண்டுகளில் 13 மடங்கு அதிகரித்துள்ளது. 2014-ல் ₹50,000 கோடியாக இருந்த சொத்து மதிப்பு 2019-ல் ₹1 லட்சம் கோடியாக உயர்ந்தது. அதன் பிறகு என்ன மாயமோ தெரியவில்லை.. திடீரென இரண்டு ஆண்டுகளில் சொத்து மதிப்பு ₹12 லட்சம் கோடியாக உயர்ந்தது" என்று விமர்சித்திருந்தார்.