இன்னும் 7 நாட்களில் பெரிய மழை.. பெங்களூருக்கு வெள்ள அபாயம்.. பேரிடர் ஆணையம் எச்சரிக்கை
கேரளா, கர்நாடக மாநிலம் குடகுவை தொடர்ந்து தற்போது பெங்களூரில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
பெங்களூர்: கேரளா, கர்நாடக மாநிலம் குடகுவை தொடர்ந்து தற்போது பெங்களூரில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
பெங்களூரில் வசிக்கும் மக்கள், கடந்த சில நாட்களாக சாலையோரத்தில் ஒரு விஷயத்தை கவனித்திருக்க வாய்ப்புள்ளது. எல்லா கழிவு நீர் குழாயும் முழுதாக திறக்கப்பட்டு அதில் இருக்கும் அடைப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது சாதாரண நடைமுறை என்று மக்கள் நினைத்திருந்தால் அது தவறு.
பெங்களூரில் வெள்ளம் வர வாய்ப்புள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ள காரணத்தால், இப்போதே கழிவு குழாய்களை அரசு முன்னெச்சரிக்கையாக சுத்தம் செய்கிறது. எந்த பகுதியிலும் கூடுதலாக தண்ணீர் தேங்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளது.
கேரளா குடகு வெள்ளம்
கேரளாவில் கடந்த இரண்டு வாரமாக வெள்ளம் ஏற்பட்டது. இப்போதுதான் அங்கு தண்ணீர் வடிய தொடங்கியுள்ளது. கேரளா வெள்ளத்திற்கு 370க்கும் அதிகமான மக்கள் பலியானதாக தகவல் வெளியாகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் குடகிலும் அதிக வெள்ளம் ஏற்பட்டது. அங்கு வெள்ளத்திற்கு 22 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
பெங்களூரில் ஏற்படும்
இந்த நிலையில்தான் தற்போது பெங்களூரில் வெள்ளம் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்காக பேரிடர் மேலாண்மை ஆணையத்தை சேர்ந்த அதிகாரிகள்,அரசு தரப்பை சேர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். இந்த வருடம் பெங்களூரில் 90 சதவிகிதம் கண்டிப்பாக வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புயலுக்கு வாய்ப்புள்ளது
இதற்கான காரணத்தையும் கூறியுள்ளனர். வங்க கடலில் ஏற்படும் காற்றழுத்த மாற்றம், பெங்களூரில் திடீர் மழைக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளனர். இது புயலை ஏற்படுத்த கூட வழியுள்ளது. ஆனால் அதிக அளவில் இதனால் பெங்களூரில் வெள்ளம் ஏற்படும் என்று கூறியுள்ளனர். இதனால் பெங்களூரில் அரசையும், அதிகாரிகளையும் இப்போதே தயாராக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
அதிகமாக திறக்க வேண்டும்
இன்னும் நான்கு நாட்களில் இந்த மழை தொடங்கும் என்று கூறியுள்ளனர். செப்டம்பர் மாதம் முழுக்க பெங்களூரில் எதிர்பாராத பெரிய மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே, காவிரியில் அதிக வெள்ளம் ஏற்பட்டு, குடகு மூழ்கியது. இதனால் காவிரியில் மேலும் அதிக அளவில் சில நாட்களில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.