ஹிந்தியில் 60 மார்க் எடுத்ததால் தற்கொலைக்கு முயன்ற மாணவி... மறுகூட்டலில் 100/100 பெற்ற அதிசயம்
பெங்களூரு: பெங்களூரில், ஹிந்தியில் 60 மதிப்பெண்கள் பெற்றதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற பத்தாம் வகுப்பு மாணவி, மறுகூட்டலில் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் நெலமங்களா பகுதியைச் சேர்ந்தவர் தன்யஸ்ரீ என்ற 10ம் வகுப்பு மாணவி. இவர் பொதுத் தேர்வில் ஹிந்தி பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், அவருக்கு 60 மதிப்பெண்கள் மட்டுமே ஹிந்தியில் கிடைத்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் மனமுடைந்த அம்மாணவி தற்கொலைக்கு முயற்சித்தார். உரிய நேரத்தில் அவளை மீட்ட அவரது தாய், மருத்துவமனையில் அனுமதித்து அவரது உயிரைக் காப்பாற்றினார்.
அதனைத் தொடர்ந்து தன்யஸ்ரீயின் விடைத்தாள் நகலைக் கோரினர் அவரது பெற்றோர். அதில், தன்யஸ்ரீ 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றிருந்தது தெரிய வந்தது. இதைக்கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து, அம்மாணவியின் தாயார் கூறுகையில், "எனது பெண்ணின் விடைத்தாளை திருத்தியது யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘சில விநாடிகளில் எனது மகளை நான் காப்பாற்றியுள்ளேன். இல்லாவிட்டால் இன்னேரம் அவள் உயிருடன் இருந்திருக்க மாட்டாள். எனது மகள் எப்போதுமே ஹிந்தியில் டாப்பர்தான். ஆனால் அவளது மதிப்பெண்களைத் தவறாகப் போட்டு அவளது உயிரைப் பறிக்க பார்த்துள்ளனர்' என்றார்.
இதற்கிடையே, மாணவியின் சரியான மதிப்பெண் மதிப்பெண் பட்டியலில் இடம் பெறும் என்று கர்நாடக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மதிப்பெண்ணை சரியாக கூட்டாத ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை வரும் என்றும் தெரிகிறது.