ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: உண்மை கண்டறியும் சோதனைக்கு ரெடியாகும் சிபிஐ! கலக்கத்தில் காங். புள்ளிகள்
டெல்லி: காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் தொடர்புடையோருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ தயாராகி வருகிறது. இதனால் முக்கிய புள்ளிகள் சிலருக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது.
அதிமுக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவன ஹெலிகாப்டர்களை கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொள்முதல் செய்தனர்.
இந்த கொள்முதலுக்கு பிரதி உபகாரமாக, சம்மந்தப்பட்ட இத்தாலி நிறுவனத்திடமிருந்து இந்திய தரப்பில் ரூ.360 கோடி லஞ்சமாகப் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முக்கிய புள்ளிகள்
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழல் விவகாரத்தில் தொடர்புடையவர்களாக சோனியா காந்தி, அவரது அரசியல் ஆலோசகர் அகமது படேல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், சில முன்னாள் அதிகாரிகள் ஆகியோரின் பெயரை இத்தாலி நீதிமன்றம் கூறியுள்ளது.

சிபிஐ கிடுக்கிப்பிடி
இதுதொடர்பாக இந்திய விமானப் படையின் முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. அப்போது ஹெலிகாப்டர் பேரத்தில் அவருக்கு இடைத்தரகர் ஒருவருடன் இருந்த தொடர்பு, அவ்வப்போது அவர் மேற்கொண்ட இத்தாலி நாட்டுப் பயணங்கள், ஹெலிகாப்டர்களின் செயல்பாடுகளையும், வசதிகளையும் திருத்தியமைத்ததற்கான காரணங்கள், தியாகியின் உறவினர்களுக்கு இந்த பேரத்தில் உள்ள தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவரிடம் சிபிஐ அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.

உண்மை கண்டறியும் சோதனை
இந்நிலையில், சந்தேகப்படும் நபர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றத்திடம் அனுமதி பெற சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கு இந்த வழக்கில் சம்மந்தம் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், உண்மை கண்டறியும் சோதனையை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இடைத்தரகர்
இந்த வழக்கு தொடர்பாக கடந்த வாரம், அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ஜேம்ஸ் கிறிஸ்டியன் மைக்கேல் என்பவர் இடைத்தரகராக செயல்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 30 மில்லியன் யூரோ மதிப்புக்கு சட்ட விரோத பண பரிமாற்றங்கள் நடந்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தாலும், இந்தியாவின் தொடர்பு குறித்து அதில் தெளிவுபடுத்தவில்லை.

அவசியம்
இந்த பேரத்திற்கு கமிஷனாக ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பணம் சென்று சேர்ந்தது என்பது குறித்த முழு விவரத்தை வெளிக்கொண்டுவர உண்மை கண்டறியும் சோதனை அவசியம் என்று கருதுவதாக சிபிஐ வட்டாரங்கள் டெல்லியில் 'ஒன்இந்தியாவிடம்' தெரிவித்தன.












Click it and Unblock the Notifications