கொடுமை! லண்டனில் செட்டிலாக புறப்பட்ட மருத்துவர்.. விமான விபத்தில் குடும்பத்துடன் பலியான சோகம்
அகமதாபாத்: அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் ஒட்டுமொத்த குடும்பமும் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. லண்டனில் குடியேறுவதற்காக ராஜஸ்தான் வந்த நபர், மனைவி மற்றும் 3 குழந்தைகளை அழைத்து கொண்டு விமானம் ஏறி இருக்கிறார். ஆனால் விமானம் விபத்தில் சிக்கியதில் குடும்பத்துடன் உயிரிழந்திருப்பது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அகமதாபாத் விமான விபத்தில் மொத்தமாக 241 உயிரிழந்திருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில் 230 பயணிகள் பயணித்துள்ளனர். மொத்தமாக 169 இந்தியர்கள், 53 பிரிட்டன் பயணிகள், 7 போர்ச்சுகல் பயணிகள் மற்றும் ஒரு கனடா பயணி, 2 பைலட் மற்றும் 10 விமான ஊழியர்கள் என்று 242 பேர் பயணித்தனர்.

241 பேர் பலி
இதில் விமானம் டேக் ஆஃப் ஆன சில நொடிகளிலேயே திடீரென மேகானி நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானம் வெடித்ததால், அதில் பயணித்த ஒரேயொரு பயணியை தவிர்த்து வேறு யாரும் உயிர் பிழைக்கவில்லை. பயணிகள் பலரின் உடல்கள் எரிந்துவிட்ட நிலையில், அவர்கள் அடையாளம் காண்பதே பெரும் சிக்கலாக மாறி இருக்கிறது.
ராஜஸ்தான் குடும்பம்
இந்த நிலையில் ராஜஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் குடும்பத்துடன் லண்டன் சென்று குடியேற முடிவு செய்து விமானத்தில் பயணித்த நிலையில், குடும்ப உறுப்பினர்கள் 5 பேரும் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பனஸ்வாரா பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கோமி வியாஸ். இவரின் கணவர் பிரதிக் ஜோஷி கடந்த 6 ஆண்டுகளாக லண்டனில் ஐடி துறையில் பணியாற்றி வந்துள்ளார்.
லண்டனில் செட்டிலாக முடிவு
இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உட்பட மொத்தமாக 3 குழந்தைகள் இருக்கின்றன. இதனால் லண்டனில் இருந்து அவ்வப்போது ராஜஸ்தான் வரும் பிரதிக் ஜோஷி தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் மொத்தமாக லண்டனில் குடியேற முடிவு செய்து அதற்கான அனைத்து விஷயங்களையும் செய்து, குடும்பத்தினரை அழைத்து செல்வதற்காக இந்தியா வந்துள்ளார்.
பணியில் இருந்து மருத்துவர் ராஜினாமா
இதன்பின் 2 நாட்களுக்கு முன்பாக மருத்துவர் கோமி வியாஸ் தனது பணியையும் ராஜினாமா செய்து லண்டனில் குடியேற தயாராகி இருக்கிறார். இந்த நிலையில் லண்டன் புறப்பட்ட கோமி வியாஸ், பிரதிக் ஜோஷி, மகள் மிராயா, மகன்கள் நகுல் மற்றும் பிரத்யுத் ஆகியோர் விமானத்தில் பயணத்தை தொடங்கி இருக்கின்றனர்.
பெரும் சோகம்
ஆனால் விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விபத்தில் சிக்கியதால், குடும்பத்தினர் 5 பேரும் உயிரிழந்தனர். புதிய வாழ்க்கையை லண்டனில் தொடங்க புறப்பட்ட குடும்பத்தினர் மொத்தமாக விமான விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விமான விபத்தில் பலியானோரின் உடல்கள் இன்னும் முழுமையாக யார் என்று அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications