தமிழகத்தில் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம்.. அசாம், வங்கத்திலும் வெற்றி நமதே... அமித் ஷா நம்பிக்கை
கொல்கத்தா: தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணியே தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்றும் அசாம் மற்றும் மேற்கு வங்கத்திலும் பாஜகவே வெல்லும் என்றும் உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு இன்னும் சில வாரங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதிலும் மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
அங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிரமாக வேலை செய்து வருகிறது. பல்வேறு முக்கிய தலைவர்களும் பாஜகவிலேயே முகாமிட்டுள்னர்.
200 தொகுதிகள் நிச்சயம்
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பிராசரம் செய்ய சென்ற அமித் ஷா பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள 42 இடங்களில் 18ஐ நாங்கள் கைப்பற்றினோம். மக்களுக்கு எங்கள் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளதே இதைக் காட்டுகிறது. வங்கத்து மக்களுக்கு தற்போது மாற்றம் வேண்டும். இந்தத் தேர்தலில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று நிச்சயம் ஆட்சியைப் பிடிப்போம்" என்றார்
மத ரீதியான பிரிவினை
நரேந்திர மோடியை மம்தாவுக்குப் பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் மேற்கு வங்க மக்களின் தேர்வு மோடி தான் என்றார். மேலும், துர்கா பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை போன்ற பண்டிகைகளுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் மத ரீதியாக வாக்காளர்களைப் பிரிக்கும் முயற்சியில் திரிணாமுல் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அசாம் தேர்தல்
அதேபோல அசாம் மாநிலத்திலும் பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் என்று அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார். கடந்த முறை வென்ற தொகுதிகளைவிடக் கூடுதல் தொகுதிகளை பாஜக வெல்லும் என்றும் அவர் கூறினார். அசாம் மக்கள் காங்கிரஸ் கூட்டணியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அசாமில் பாஜக மேற்கொண்டுள்ள வளர்ச்சி பணிகளைக் கட்சியை வெற்றிபெற வைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
காங்கிரசின் மதச்சார்பின்மை
காங்கிரஸ் கூட்டணி மதச்சார்பின்மை என்ற போலியான கொள்கையை முன்னெடுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். மதச்சார்பின்மை பேசுபவர்கள் கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலத்தில் இஸ்லாமியக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், சிஏஏ-வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் ராகுல் காந்தி, என்ஆர்சி குறித்து தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்றும் கூறினார்.
அதிமுக பாஜக கூட்டணி வெல்லும்
அதேபோல தமிழ்நாட்டில் அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியை அமைக்கும் என்றும் அவர் கூறினார். மேலும், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக தனது எம்எல்ஏகளின் எண்ணிக்கையை இந்த முறை அதிகப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.