விஜய் ஆட்டம் அதிரடி.. காங்கிரஸ் கேட்கும் 2 அமைச்சர் பதவி.. அதிமுக லீமா ரோஸ் மார்டின் கொடுத்த டிவிஸ்ட்!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அரசியல் களம் விஜய் எப்படி ஆட்சியை அமைக்கப்போகிறார், கூட்டணி யாருடன் என கேள்விகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவை திரட்டும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
இன்னும் 10 எம்.எல்.ஏக்களின் உதவி தேவைப்படும் சூழலில், திமுக மற்றும் அதிமுக ஆகிய பிரதான கட்சிகளைத் தவிர்த்து வெளியே உள்ள 20 எம்.எல்.ஏக்களின் நிலைப்பாடு தான் தமிழ்நாட்டில் விஜய் ஆட்சி அமைக்க முக்கியமானதாக மாறியுள்ளது.

சின்ன கல்லு பெத்த பவர்
தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு திரட்டும் பணியில் தேசிய கட்சியான காங்கிரஸ், மாநில கட்சிகளான விசிக மற்றும் பாமக ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
காங்கிரஸ் ஐந்து இடங்களையும், பாமக நான்கு இடங்களையும் வென்றுள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் சேர்த்து இக்கட்சிகள் தற்போது 'சின்ன கல்லு பெத்த பவர்' லிஸ்ட்டில் சேர்த்துள்ளது. இந்தக் கட்சிகளுடன் தவெக தரப்பு தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்தக் கூட்டணி ஆதரவுடன் விஜயின் அமைச்சரவை அமைக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. தற்போது பாமக மற்றும் காங்கிரஸ் தரப்பில் கிரீன் சிக்னல் வந்துள்ளது.
காங்கிரஸ் ஆதரவு உறுதி: 2 அமைச்சர் பதவிகள்
தவெகவுக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட முடிவெடுத்துள்ளது. தேர்தலுக்கு முன்பே கூட்டணி வாய்ப்பைத் தவறவிட்ட காங்கிரஸ், தற்போதைய சூழலை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முன்வந்துள்ளது. காங்கிரஸ் தரப்பில் இருந்து இரண்டு அமைச்சர் பதவிகளை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும், எந்தச் சூழலிலும் அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுடன் தவெக அணி சேரக்கூடாது என்ற நிபந்தனையும் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிவடைந்தால், விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
காங்கிரஸ் தலைவர் பதில்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிப்பது குறித்து மாநில காங்கிரஸ் நிர்வாகமே முடிவு செய்யும். மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என்று தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த், "அரசு அமைப்பதில் விஜயின் தவெகவுக்கு ஆதரவளிக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு அரசியல் விவகாரக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது" என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இந்த அங்கீகாரத்தின் அடிப்படையில் இன்று சென்னையில் நடைபெறும் காங்கிரஸ் நிர்வாகக் குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று ஆதரவுக் கடிதம்
இன்று காங்கிரஸ் கட்சி தவெக தலைவர் விஜய் வசம் ஆதரவுக் கடிதத்தை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸின் 5 எம்.எல்.ஏக்களும் ஒரு கடிதம் மூலம் தங்கள் ஆதரவை தெரிவிப்பார்கள் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் தவெகவின் ஆட்சியமைப்பது நெருங்கியுள்ளது. திமுகவுடன் நீண்டகால கூட்டணியை வைத்திருந்த காங்கிரஸ், இம்முறை விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
அதிமுக லீமா ரோஸ் கொடுத்த டிவிஸ்ட்
இதற்கிடையே, அதிமுகவின் புதிய எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின், தவெகவுடன் தொடர்பில் இருப்பதாகத் தகவல் வெளியானது. இருப்பினும், அதிமுகவின் மற்றொரு தலைவர் லீமா ரோஸ் தவெகவுக்கு ஆதரவளிக்கும் வாய்ப்பு இல்லை என இத்தகவலை மறுத்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக, தமிழக வெற்றிக் கழகம் சிறு கட்சிகளின் ஆதரவுடன் விரைவில் அரசு அமைக்கும் நிலை உருவாகியுள்ளது. இன்றைய காங்கிரஸ் கூட்டம் மற்றும் ஆதரவுக் கடிதம் மாநில அரசியல் வரலாற்றில் முக்கியத் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications