தவெக பாடலை ரிங்டோனாக வைத்த இளைஞர் மீது தாக்குதல்.. தட்டி கேட்ட உறவினருக்கும் அடி
சென்னை: சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் தனி பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. திமுக எதிர்க்கட்சியாக உள்ளது. ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் திமுக - தவெக இடையே முட்டல் மோதல் ஏற்பட்டு வருகிறது. சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனை சென்ற தவெக உறுப்பினர் ஒருவர் அக்கட்சி பாடலை செல்போன் ரிங் டோனாக வைத்துள்ளார். இதைக் கேட்ட திமுகவினர் அந்த இளைஞர் மற்றும் உறவினர் மீதும் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது
சென்னையைச் சேர்ந்தவர் தவெக நிர்வாகி சாலமன். அவரின் சித்தப்பா உடல்நலக்குறைவால் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சித்தப்பாவை பார்ப்பதற்காக சாலமன் கீழ்பாக்கம் மருத்துவமனை சென்றபோது, அவரின் செல்போனில் தவெக பாடல் ஒலித்துள்ளது. சாலமன் தன் செல்போனில் தவெக பாடலை ரிங்டோனாக வைத்திருந்தார்.

தவெக ரிங்டோனால் பிரச்சனை
அருகில் இருந்த திமுக நிர்வாகிகள் கோபத்தில் சாலமனை தகாத வார்த்தைகளில் விமர்சித்தபடி கடுமையாக தாக்கியுள்ளனர். தலைப் பகுதி, கண் அருகே தாக்கியதில் ரத்தம் கொட்டியது. அவருக்கு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டது. இதுகுறித்து சாலமன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "என் செல்போனில் தவெக பாடலை ரிங்டோனாக வைத்துள்ளேன்.
மருத்துவமனையில் இருப்பதால் பேசக்கூடாது என்று கட் செய்தேன். எனக்கு மீண்டும் அழைப்பு வந்தது. அப்போது அருகில் இருந்த திமுக நிர்வாகி என்னை அசிங்கமாக திட்டினார். இவனுங்க என்ன ஜெயிச்சுட்டு ஓவரா ஆடாறங்க. எல்லாரையும் வெட்டறேன் என்று மிரட்டினார். அவர் தகாத வார்த்தைகளில் பேசியதற்கு, நான் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தேன்.
உறவினர்கள் புகார்
மருத்துவர்கள், பாதுகாவலர்கள் என்னை வெளியேற சொன்னார்கள். நான் வெளியில் வந்துவிட்டேன். என் உறவினர்களையும் திட்டினார்கள். ரிங்டோன் வைத்தால் என்ன தப்பு அண்ணா என்று என் சகலை கேட்டான். அதற்கு அவனை அடித்துவிட்டனர். என்னையும் அடித்தனர். அப்போது அங்கு காவல்துறையினரும் இல்லை. சம்பவத்திற்கு பிறகு தான் போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்தனர்" என்றார்.

சாலமனின் உறவினர் பெண் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அவர் தவெகவில் உறுப்பினராக உள்ளார். அதனால் அந்த பாடலை ரிங்டோனாக வைத்துள்ளார். வந்த இடத்தில் அழைப்பு வந்துள்ளது. அவர்கள் தகாத வார்த்தைகளில் பேசியபோது, இப்படி பேச வேண்டாம். இது மருத்துவமனை. எதுவாக இருந்தாலும் வெளியில் சென்று பேசிக் கொள்ளலாம் என கூறியுள்ளார். திடீரென எங்கள் உறவினர்களை அவர்கள் அடித்தனர்.
விசாரணை
காவல்துறை வந்து அவர்களை கண்டிக்க கூட இல்லை. போலீஸ் வந்த பிறகும் அவர் எங்களை கேலி செய்து சிரிக்கிறார்கள். நீங்கள் ஏன் ரிங்டோன் வைக்கிறீர்கள் என்று கேட்டு அடிக்கிறார்கள். எங்கள் செல்போனில் ரிங்டோன் வைப்பது எங்களின் உரிமை. அதற்கு அடிக்க முடியுமா. எங்களுக்கு யாரும் உதவவில்லை. தோல்வியடைந்தால் அடிப்போம் என்பது அராஜகம்" என்றார். சம்பந்தப்பட்ட இளைஞர்கள், உறவினர்கள் அளித்த புகாரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications