இந்தியாவில் கிளை துவங்கும் அல் கொய்தா: உளவுத் துறையிடம் அறிக்கை கேட்கும் மத்திய அரசு
டெல்லி: அல் கொய்தாவின் புதிய கிளை இந்திய துணை கண்டத்தில் துவங்கப்படும் என்று அந்த அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி தெரிவித்துள்ளார்.
அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி சுமார் ஒரு மணிநேரம் பேசும் வீடியோ போராளிகள் அமைப்புகளின் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஜவாஹிரி கூறியிருப்பதாவது,
நாங்கள் இஸ்லாம் இந்தியாவுக்குள் திரும்பி வர விரும்புகிறோம். படையெடுக்கப்படும் முன்பு இந்தியா முஸ்லீம் உலகத்தின் ஒரு அங்கமாக இருந்தது. இந்திய துணை கண்டத்தில் அல் கொய்தா அமைப்பின் புதிய கிளை துவங்கப்படுகிறது. இந்த கிளை காஷ்மீர், குஜராத், அகமதாபாத், அஸ்ஸாம், மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் உள்ள முஸ்லீம்களுக்காக அமைக்கப்படுகிறது.
இந்த புதிய கிளைக்கு அல் கொய்தா அமைப்பின் பாகிஸ்தானுக்கான ஷரியா குழு தலைவர் அசிம் உமர் தலைவராக இருப்பார். உஸ்தாத் உசாமா மஹ்மூத் செய்தித் தொடர்பாளராக இருப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அல் கொய்தா தலைவர் ஒசாமாவை அமெரிக்கா சுட்டுக் கொன்ற பிறகு ஜவாஹிரி அந்த அமைப்பின் தலைவராக ஆனார். அவர் தற்போது அல் கொய்தா அமைப்புக்கு புத்துயிர் அளித்து விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார்.
ராஜ்நாத் சிங்
ஜவாஹிரியின் அறிவிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உளவுத் துறை அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். அந்த வீடியோ உண்மையானதா என்பதை கண்டறிந்து அறிக்கை சமர்பிக்க அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அல் கொய்தாவின் அறிவிப்பு குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரா தலைவர் ஆலோக் ஜோஷி ஆகியோரும் ராஜ்நாத் சிங்குடன் அவசர ஆலோசனை நடத்தினர்.
மேலும் அனைத்து காவல் நிலையங்களையும் உஷார் நிலையில் இருக்குமாறு உளவுத் துறை தெரிவித்துள்ளது.