"அய்யய்யோ".. மது குடிப்பவர்களுக்கும் 'கேன்சர்' வர அதிக வாய்ப்பாம்.. பகீர் எச்சரிக்கை விடுத்த "ஹு"
ஜெனீவா: மது அருந்துவதால் வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய் உட்பட 7 வகையான புற்றுநோய்கள் வருவதற்கு மிக அதிக வாய்ப்புகள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரித்துள்ளது.
பல்வேறு நாடுகளில் கடந்த சில வருடங்களாக நடைபெற்ற தொடர்ச்சியான மருத்துவ ஆய்வுகள் மூலம், இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளில் மது அருந்தும் பழக்கம் கணிசமாக அதிகரித்து வரும் சூழலில், உலக சுகாதார நிறுவனம் இந்த அதிரடி எச்சரிக்கையை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் மது விற்பனையை 6 மணி நேரமாக குறைக்கவும்! மதியம் 2 டூ இரவு 8 வரை போதும்! பாமக யோசனை!
"மது" பற்றிய தவறான புரிதல்
ஒருசில விஷயங்கள் எந்தவித கேள்விக்கும் ஆட்படாமல், பொதுமக்கள் மத்தியில் வேகமாக பரவிவிடும். அப்படியொரு விஷயம்தான், "மது குடிப்பதால் பெரிய பாதிப்பு இல்லை" என்கிற சொல்லாடல். இதை சமீபகாலமாக மிக பரவலாகவே கேட்க முடிகிறது. இளைஞர்கள் மத்தியிலும் மது அருந்துவது என்பது ஏதோ ஃபேஷனை போல மாறிவிட்டது. ஒருகாலத்தில், தான் மது அருந்துவது உறவினர்கள் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாதே என பயந்த காலம் மலையேறி, பெற்றோர் இருக்கும் போதே 'நான் சோஷியல் டிரிங்கர்' (social drinker) எனக் கூறுவது ஸ்டைலாகி விட்டது.
பகீர் எச்சரிக்கை
அதாவது, சிகரெட் பிடிப்பதை விட மது அருந்துவதில் பாதிப்பு மிக மிக குறைவு என்கிற 'பொது எண்ணம்' தற்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஆனால், நன்றாக யோசித்து பார்த்தால் ஒரு விஷயம் நமக்கு தெரியவரும். மது அருந்துவதால் பாதிப்பு குறைவு என்பதை எந்த மருத்துவரும் நம்மிடம் கூறியது கிடையாது. இருந்தபோதிலும், இந்த எண்ணம் எப்படியோ நம் மக்கள் மனதில் பதிந்துவிட்டது. இந்த தவறான எண்ணம்தான், மது அருந்துவோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரிப்பதற்கு காரணம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில்தான், உலக சுகாதார நிறுவனம் தற்போது குலைநடுங்க வைக்கும் ஓர் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.
7 வகை புற்றுநோய்
உலக சுகாதார நிறுவனம் இதுதொடர்பாக 'தி லான்செட் பப்ளிக் ஹெல்த்' என்கிற மருத்துவ இதழில் ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவன: "ஆரோக்கியத்தை பாதிக்காத வகையில் மது அருந்ததலாம்"; "குறைவான அளவு மது குடித்தால் உடலுக்கு பாதிப்பு கிடையாது" என்ற கூற்றுகள் உண்மையானவை அல்ல. மருத்துவ ஆதாரம் துளியும் இல்லாத இந்தக் கருத்துகள் மக்கள் மனதில் வேரூன்றி இருக்கின்றன. ஆனால், மது குடிப்பது மிக மிக ஆபத்தானது என்பதுதான் மருத்துவ உண்மை. மது அருந்துவதால் 7 வகையான புற்றுநோய்கள் வருவதற்கு மிக மிக அதிக வாய்ப்புகள் உள்ளன.
கொஞ்சம் குடித்தாலும்..
மதுவை கொஞ்சமாக அருந்தினால் பாதிப்பு ஏற்படாது என்பதும் தவறான புரிதல். எந்த அளவில் மது அருந்தினாலும் அது உடலில் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும். உலகம் முழுவதும் நடந்த தொடர்ச்சியான ஆய்வுகளின் மூலம் மது எந்த அளவில் உட்கொண்டாலும் வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், பெண்களுக்கு மார்பக புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஆகிய 7 வகை புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
மது சாதாரண பானம் அல்ல
மது என்பது சாதாரண பானம். அல்ல. உடலில் போதையை உண்டாக்குவதற்கு அதில் பல வகையான செயற்கை ரசாயனங்களும், மூலப்பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. எனவே மதுவை அதிகமாக குடிக்கிறீர்களா, குறைவாக குடிக்கிறீர்களா என்பது விஷயம் அல்ல. மதுவை குடித்தாலே, ஏன் ஒரு சொட்டு மதுவாக இருந்தாலும் அது உடலுக்கு தீங்கை விளைவிக்கும். உதாரணமாக, உலகில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் மது அருந்துகிறார்கள். அங்கு 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மேற்கண்ட 7 வகையான புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.