'அண்ணா, காமராஜருக்கு' ஆபத்து... விமான நிலையங்களில் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்.. மத்திய அரசு
டெல்லி: இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு அந்தந்த மாநில அரசியல் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. அவை விரைவில் நீக்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில் உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் பெயரும், சர்வதேச விமான நிலையத்துக்கு அண்ணா பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
நாடெங்கும் சில விமான நிலையங்களுக்கு பெயர் சூட்டப்படாமல் உள்ளது.
அந்த விமான நிலையங்களுக்கு தங்கள் கட்சி தலைவரின் பெயரை சூட்ட பல்வேறு கட்சியினர் போட்டி போட்டபடி உள்ளனர்.
பஞ்சாப்பில் சண்டை:
சண்டிகர் நகரில் உள்ள விமான நிலையம் பஞ்சாப், ஹரியானா இரு மாநிலங்களுக்கும் பொதுவாக உள்ளது. அந்த விமான நிலையத்துக்கு சுதந்திரப் போராட்ட தியாகி பகத்சிங் பெயரை சூட்ட வேண்டும் என்று பஞ்சாப் மாநில அரசு கூறி வருகிறது.ஆனால் ஹரியானா மாநில அரசு, சண்டிகார் விமான நிலையத்துக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் பெயரை சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
தலைவர்கள் பெயர் நீக்கம்:
இந்த நிலையில் மத்திய விமான போக்குவரத்துத் துறை புதிய கொள்கை ஒன்றை வரையறுத்துள்ளது. அதில் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு சூட்டப்பட்டுள்ள அரசியல் தலைவர்களின் பெயர்களை நீக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டம்:
இது தொடர்பாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த மாத இறுதியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
நகரத்தின் பெயர்கள்:
அந்த கூட்டத்தில் விமான போக்குவரத்து துறை கொள்கை பற்றி மத்திய அரசு முடிவு எடுக்கவுள்ளது. அப்போது விமான நிலையங்களுக்கு சூட்டப்பட்டுள்ள தலைவர்களின் பெயர்களை நீக்குவது பற்றி தீர்மானிக்கப்படுகிறது.
தலைவர்கள் சம்மதம்:
தலைவர்களின் பெயர்கள் நீக்கப்படும் பட்சத்தில் அந்தந்த நகரின் பெயரிலேயே விமான நிலையத்தை அழைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகளிடம் இருந்து மாறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கட்சிகள் தலைவர்கள் பெயரை அகற்ற சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்ணா - காமராஜர்
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை விமான நிலையத்தில் மட்டுமே தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. அதாவது பன்னாட்டு முனையத்திற்கு அண்ணா முனையம் என்றும், உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் முனையம் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அது நீக்கப்படும் என்று தெரிகிறது.
தேவர் - கலாம் பெயர்களுக்கு வாய்ப்பில்லை
இதுபோக மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. அதேபோல அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் சமீபத்தில் எழுந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று தற்போது தெரிகிறது.