ஆல் பாஸ் சிஸ்டம் ரத்து.. 5, 8-ம் வகுப்பு மாணவர்களே உஷார்.. அசாம் அரசு திடீர் முடிவு.. ஏன் தெரியுமா?
கவுகாத்தி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் இனி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தானாக பாஸ் ஆகும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு நடைபெறும் என்றும் தேர்ச்சி அடையாத மாணவ - மாணவிகள் அதை வகுப்பை மீண்டும் படிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்ற்கான முடிவு நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அசாம் கல்வித்துறை அமைச்சர் ரானோஜ் பெகு கூறியதாவது:-

கட்டாய கல்வி உரிமைச்சட்டம்
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் கீழ் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் படிக்கும் ஒரு மாணவ- மாணவியருக்கு தேர்வுகள் வைக்கலாம். ஆனால் தேர்வில் தேர்ச்சி அடையாவிட்டாலும் தேக்க நிலையில் வைக்கக் கூடாது. அதாவது பெயில் ஆக்க கூடாது என்ற விதிகள் உள்ளன. எனினும் கடந்த 2019 ஆம் ஆண்டு அசாம் அரசு இந்த சட்டத்தை திருத்தம் செய்தது.

தேர்ச்சி பெற்றால் தான்..
இந்த திருத்தத்தின் அடிப்படையில் தற்போது அமைச்சரவை புதிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, 5 மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு தேர்வு நடத்தப்படும். தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவ மாணவிகள் அடுத்த வகுப்புக்கு செல்ல முடியாது. அதேவகுப்பை மீண்டும் படிக்க வேண்டும். எனினும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறு வாய்ப்பு ஒன்று வழங்கப்படும். இரண்டு மாதங்களுக்குள் இந்த மறு தேர்வு நடைபெறும்.

அதே வகுப்பில் தான் படிக்கனும்
இதில் தேர்ச்சி பெற்றால் அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும். அத்தகைய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை ஆசிரியர்கள் எடுப்பார்கள். மறு தேர்விலும் பெயில் ஆனால் அதே வகுப்பில் தான் அந்த மாணவ மாணிவிகள் மேலும் ஒரு ஆண்டு படிக்க வேண்டியிருக்கும்'' என்றார்.

ஏன் இந்த முடிவு?
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ''ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் செய்யும் நடைமுறையால் மாநிலத்தில் கல்வியின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இதை சீர்படுத்தும் வகையில் பாஸ்- பெயில் நடைமுறையை கொண்டுவந்துள்ளோம். இதனால், கல்வியின் தரம் மேம்படும் என்று நம்புகிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications