அமேதியில் 65 ஏக்கர் நிலத்தை ஆட்டைய போட்ட ராஜீவ் அறக்கட்டளை: ஸ்மிருதி இரானி பகீர் புகார்
அமேதி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தினரால் நடத்தப்படும் ராஜீவ் அறக்கட்டளைக்கு நிலம் விற்பனை செய்யப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பகீர் புகார் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் துணைத் ராகுலின் தொகுதியான உத்தரப்பிரதேசத்தின் அமேதியில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஸ்மிருதி இரானி பேசியதாவது:
அமேதியின் வளர்ச்சிக்காக தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை சோனியா காந்தி குடும்பத்தினர் நிறைவேற்றத் தவறிவிட்டனர். ஒரு ரயில் இருப்புப் பாதை அமைவதற்கு இந்தத் தொகுதி, இத்தனை ஆண்டுகளாக காத்துக் கிடக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி பொய்யர் அல்ல. ராகுல் காந்திதான் அப்படிப்பட்டவர். விவசாயிகளின் 65 ஏக்கர் நிலங்களை அபகரித்திருப்பதுதான் இதற்கு சாட்சி.
சைக்கிள் தொழிற்சாலை அமைப்பதற்காக இந்தத் தொகுதியில் உள்ள 65 ஏக்கர் விவசாய நிலம் 1980-ஆம் ஆண்டுகளில் கையகப்படுத்தப்பட்டது. அந்தத் தொழிற்சாலை வந்ததா? யாருக்காவது வேலை கிடைத்ததா?
அந்த நிலத்துக்கு என்னவாயிற்று? இதுகுறித்துப் பேச யாருக்கும் தைரியம் கிடையாது. இந்த நிலம் தற்போது ராகுல் குடும்பத்துக்குச் சொந்தமான ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டது.
இந்த விற்பனை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி நடந்து உள்ளது. ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு விற்பனை செய்யப்பட்டதற்கான பத்திரப்பதிவு ஆதாரத்துடன் தான் நான் குற்றம்சாட்டுகிறேன்.
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை என்றும் விவசாயிகளின் ஒரு அங்குல நிலத்தை கூட எடுக்கவிடமாட்டோம் என்று ராகுல்காந்தி கூறி உள்ளார். ஆனால் அவர் விவசாயிகளின் நிலத்தை ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு கையகப்படுத்தி இருக்கிறார்.
இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார்.
ஆனால் ஸ்மிருதி இரானியின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சாம்ராட் சைக்கிள் நிறுவனம் மூடப்பட்டதற்கும், அதன் பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏலம் விடப்பட்ட அந்த நிலத்தை வாங்கியதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை; இதுகுறித்து ஸ்மிருதி இரானி பொது விவாதத்துக்கு வந்தால், உண்மை எது? பொய் எது? என்பது தெரியவரும் என்றார்.
இந்த செய்தி குறித்த முழு விவரங்களுக்கு