உள்ளடி வேலை.. இமாச்சலில் 30 தலைவர்கள் காங்கிரஸில் இருந்து நீக்கம்.. ஓட்டு எண்ணிக்கைக்கு முன் அதிரடி
சிம்லா: இமாச்சல பிரதேச தேர்தலில் உள்ளடி வேலை பார்த்ததாக கூறி ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெறும் நிலையில் மொத்தம் 30 தலைவர்களை காங்கிரஸ் கட்சி அதிரடியாக நீக்கம் செய்துள்ளது. முன்னாள் முதல்வரான வீரபத்ர சிங் மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் பிரதீபா சிங் எம்பியின் மகன் வித்ரமாதித்ய சிங் போட்டியிட்டுள்ள தொகுதியில் உள்ளடி வேலை செய்த புகாரில் இவர்கள் அனைவர் மீதும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் 68 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி மொத்தம் 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
இங்கும் பாஜக, ஆளுகாங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மொத்தம் 412 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இன்று ஓட்டு எண்ணிக்கை
இந்நிலையில் தான் கடந்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் 55 லட்சத்து 74 ஆயிரத்து 793 பேர் ஓட்டளிக்க 7,881 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தம் 75.6 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இந்த ஓட்டுக்கள் இன்று 59 இடங்களில் உள்ள 68 ஓட்டுச்சாவடி மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.

காங்கிரஸ் முன்னிலை
தபால் ஓட்டுக்கள் முதலில் எண்ணப்பட்டன. இதில் முதலில் பாஜக பல தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. அதன்பிறகு காங்கிரஸ் கட்சி முன்னேற்றம் அடைந்தது. காலை 9 மணி நிலவரப்படி இமாச்சலில் பாஜக 24 தொகுதிகளிலும், காங்கிரஸ் 28 இடங்களிலும், ஆம்ஆத்மி 4 இடங்களிலும் முன்னிலை வகித்தன.

30 தலைவர்கள் நீக்கம்
இந்நிலையில் தான் ஓட்டு எண்ணிக்கை துவங்குவதற்கு முன்பே காங்கிரஸ் கட்சி களையெடுப்பு வேலைகளை செய்துள்ளது. அதன்படி மாநிலத்தில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி 30 தலைவர்களை காங்கிரஸ் கட்சி நீக்கம் செய்துள்ளது. இவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 ஆண்டுகள் வரை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளடி வேலை என புகார்
இதில் சிம்லா புறநகர் மாவட்ட குழுவின் துணை தலைவர்கள், முன்னாள் துணை தலைவர்கள், இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் உள்பட 30 முக்கிய தலைவர்கள் அடங்குவர். இவர்கள் தேர்தல் சமயத்தில் உள்ளடி வேலை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மகன் போட்டியால் அதிரடி
மேலும் 30 பேர் தொடர்பாக பிளாக் காங்கிரஸ் சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் மாநில காங்கிரஸ் தலைவரான முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மனைவி பிரதீபா சிங் எம்பி இந்த முடிவை எடுத்துள்ளார். இவரது மகன் விக்ரமாதித்ய சிங், சிம்லா புறநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் தான் அந்த பகுதி தலைவர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications