பணவீக்கம்.. விலைவாசி உயர்வு.. மத்திய அரசுக்கு எதிராக வீதி நாடகம்.. சிவன் வேடமிட்ட நபர் அதிரடி கைது
கவுஹாத்தி: பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை கூறி மத்திய அரசுக்கு எதிராக வீதி நாடகத்தில் சிவன் வேடமிட்டு போராட்டம் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அசாம் மாநிலம் நாகான் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரிஞ்சி போரா. இவர் நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பு பிரச்சனை, பணவீக்கம், விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்தார்.
அதன்படி நேற்று பிரிஞ்சி போரா, கரிஷ்மா என்பவருடன் சேர்ந்து நாகான் நகரில் நூதனமான முறையில் வீதி நாடக போராட்டத்தில் குதித்தார்.
சிவன்-பார்வதி வடிவில் வீதி நாடகம்
இந்த போராட்டத்தின்போது பிரிஞ்சி போரா சிவன் வேடமிட்டு இருந்தார். கரிஷ்மா பார்வதி போன்று உடை அணிந்திருந்தார். இவர்கள் 2 பேரும் புல்லட்டில் வலம் வந்தனர். கல்லூரி சவுக் பகுதியில் நாட்டின் பணவீக்கம், வேலைவாய்ப்பு பிரச்சனை, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து வீதி நாடகம் நடத்தி பொதுமக்களிடம் எடுத்து கூறினர். மேலும், இதனை எதிர்த்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
மேலும் மத்திய அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் ஏழை மக்களின் நலனை கருத்தில் கொள்ளவில்லை. ஏழை மக்களின் பிரச்சனைகளுக்கு செவிசாய்க்காமல் பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர் என்று குற்றம்சாட்டினர். பிறகு அவர்கள் பாடாபஜார் பகுதியில் இதேபோன்று வீதி நாடகத்தை நடத்தினர். அங்கும் மத்திய அரசால் ஏழைகள் பாதிக்கப்படுவதாக அவர்கள் வீதி நாடகம் நடத்தினர்.
போலீசில் புகார்-கைது
இதுபற்றி விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இந்து தெய்வங்களின் வேடமணிந்து மதஉணர்வை புண்படுத்தியதாக நாகனில் உள்ள சாதர் போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் பிரிஞ்சி போராவை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பொறுத்து கொள்ள மாட்டோம்
இதுபற்றி போலீஸ் நிலையத்தின் பொறுப்பாளர் மனோஜ் ராஜ்வான்சி கூறுகையில், ‛‛சிவன் போன்று உடையணிந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னும் 2 பேருக்கு தொடர்பு உள்ளது. அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை'' என்றார். இதுபற்றி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் நாகான் செயலாளர் பிரதீப் ஷர்மா கூறுகையில், ‛‛இதுபோன்ற விஷயங்களை நாங்கள் பொறுத்து கொள்ள மாட்டோம். அவர்கள் தாராளமாக போராடலாம். அதற்கு நாங்கள் தடை போடவில்லை. ஆனால் இந்து கடவுள்களின் பெயை பயன்படுத்த அனுமதி அளிக்கமாட்டோம்'' என கூறினார்.
காளி சர்ச்சைக்கு இடையே கைது
ஏற்கனவே தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர் லீனா மணிமேகலையின் காளி குறித்த ஆவணப் படத்தின் போஸ்டர் சர்ச்சையானது. காளி வேடமணிந்த பெண் புகை பிடிப்பது போலவும், ஓரினச்சேர்க்கையாளர்களின் வானவில் கொடியை கையில் ஏந்தியிருப்பது போன்றும் போஸ்டர் வெளியிட்ட நிலையில் லீனா மணிமேகலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது அசாமில் சிவன் வேடமிட்டு வீதி நாடகம் மூலம் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.