பெங்களூரில் கலவர மேடையான பாஜக, காங். வேட்பாளர்கள் பங்கேற்ற விவாத மேடை
பெங்களூர்: தெற்கு பெங்களூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அனந்த் குமார் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் நந்தன் நிலகேனி ஆகியோருக்கு இடையே நடந்த விவாதம் வில்லங்கத்தில் முடிந்தது.
தெற்கு பெங்களூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அனந்த் குமார் மற்றும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நந்தன் நிலகேனி ஆகியோருக்கு இடையே பெங்களூரில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாத நிகழ்ச்சிக்கு பயோகான் தலைவர் கிரண் மஜும்தார் ஷா தலைமையிலான பெங்களூர் அரசியல் நடவடிக்கை குழு ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்ச்சியில் முதலாவதாக பேசிய அனந்த் குமார் கன்னடத்தில் பேசினார். அவரை அடுத்து பேச வந்த நிலகேனி ஆங்கிலத்தில் பேசத் துவங்கினார். உடனே அங்கிருந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை கட்டாயப்படுத்தி கன்னடத்தில் பேச வைத்தனர். இதையடுத்து பாஜக மற்றும் காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே வாக்குவாதமும், கிட்டத்தட்ட கைகலப்பும் நடந்தது. அனந்த் குமார் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பற்றி பேசியபோது காங்கிரஸார் மேடையில் ஏறி அவரை பேசவிடாமல் கூச்சலிட்டனர். இதையடுத்து நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
உங்கள் தொகுதிக்கு என்ன செய்வீர்கள் என்று கேட்டால் அதை கூறாமல் அனந்த் குமார் மத்திய அரசை தாக்கிப் பேசுகிறார் என்று நிலகேனி பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அனந்த் குமார் கூறுகையில், நான் நாடு சந்திக்கும் முக்கிய பிரச்சனையை எழுப்பினேன். அப்போது காங்கிரஸ் வேட்பாளரின் ஆதரவாளர்கள் வந்து இடையூறு செய்தனர். இது ஜனநாயக முறைப்படி நடந்த விவாதம். அவர்கள் கூறியதை நாங்கள் பொறுமையுடன் கேட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications