கல்லீரல் சிகிச்சைக்காக 3 குழந்தைகளை விற்க முயன்ற பெண்: காக்கிநாடா அரசு மருத்துவமனையில் அனுமதி
நகரி: கல்லீரல் நோய் சிகிச்சைக்காக தனது மூன்று குழந்தைகளை விற்க முற்பட்ட பெண்ணிற்கு காக்கிநாடா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் யாதவொறு கிராமத்தைச் சேர்ந்தவர் ஷேக்புடி. கணவரை இழந்த இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கூலி வேலை செய்து குழந்தைகளை காப்பாற்றி வந்த ஷேக்புடி சமீபத்தில் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டார்.
நோய்த்தாக்கத்தால் வேலைக்கு செல்ல முடியாமலும், வைத்தியம் பார்க்க பணமில்லாமலும் நெருக்கடிக்கு ஆளானார் ஷேக்புடி. இதனால் தனது குழந்தைகளை விற்று அந்தப் பணத்தில் தனது சிகிச்சைகளை மேற்கொள்வது என அவர் முடிவெடுத்தார்.
ஷேக்புடியின் இந்த முடிவு அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. இந்நிலையில், இந்த விசயம் அரசின் கவனத்திற்கும் சென்றது.
இது தொடர்பாக ஷேக்புடியைச் சந்தித்தார் குழந்தைகள் பாதுகாப்பு நல பெண் அதிகாரி சூர்ய சக்ரவேணி. பின்னர், உடனடியாக ஷேக்புடி சிகிச்சைக்காக காக்கிநாடா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இவரது 3 குழந்தைகளில் 2 பெண் குழந்தையை காக்கிநாடா அருகே உள்ள பெண்டுலூர் காப்பகத்திலும், ஆண் குழந்தையை ஏடூர் காப்பத்திலும் அதிகாரிகள் சேர்த்து பராமரித்து வருகின்றனர்.