பற்றி எரியும் ஆந்திரா.. சந்திரபாபு நாயுடு-ஜெகன்மோகன் கட்சியினர் கடும் மோதல்.. வீடுகளுக்கு தீவைப்பு
அமராவதி: ஆந்திராவில் ஆளும் கட்சியான முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸாருக்கும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் வீடுகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால் ஆந்திராவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அக்கட்சியின் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக உள்ளார். கடந்த 2019ல் நடந்த தேர்தலில் ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதியில் 151 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
இதனால் ஆந்திராவை ஆட்சி செய்த தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பறிகொடுத்தது. அதன் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது பிரதான எதிர்க்கட்சியாக செயல்படுவதற்கான எம்எல்ஏக்கள் கூட சந்திரபாபு நாயுடுவுக்கு இல்லை.
கொஞ்ச நேரத்தில் கல்யாணம்.. மண்டபத்தில் இருந்த பெண்ணை தரதரவென இழுத்துச் சென்று.. கொடூர கொலை! பகீர்
2024ல் சட்டசபை தேர்தல்
ஆந்திராவுக்கு மீண்டும் 2024ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு இன்னும் 18 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தற்போது தெலுங்கு தேசம், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. மேலும் ஆளும் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஆளும் கட்சிக்கு எதிராக பிரசாரம்
இந்நிலையில் தான் ஆந்திராவின் பல்நாடு மாவட்டம் மச்சர்லாவில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் ' Idem Kharma Rashtraniki ' எனும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சியின்போது ஊர்வலம் சென்ற தெலுங்கு தேசம் கட்சியினர் ஆளும் அரசுக்கு எதிராக பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினர். அதில், தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் அரசால் மாநிலம் பின்தங்கியுள்ளது. அவர் தலைமையில் மாநிலம் முன்னேற்றம் அடையவில்லை. இதனால் ஆட்சி மாற்றம் அவசியம் என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் தெருமுனை கூட்டமும் நடந்தது.
கடும் மோதல்-கல், பாட்டீல் வீச்சு
இதற்கு அந்த பகுதியில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 2 கட்சியினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றவே மோதலாக மாறியது. அப்போது 2 கட்சியினரும் ஒருவரையொருவர் மாறிமாறி தாக்கி கொண்டனர். கற்கள் மற்றும் பாட்டில்கள் வீசப்பட்டன. பலரும் காயமடைந்தனர். இதனால் மினி போர்க்களமாக அந்த இடம் மாறியது.
வீட்டுக்கு தீவைப்பு
இதுபற்றி அறிந்த போலீசார் வேகமாக வந்து இருதரப்பினரையும் அங்கிருந்து விரட்டியடித்தனர். தெருமுனை பிரசாரக்கூட்டம் கலைக்கப்பட்டது.தொடர்ந்து பதற்றம் நிலவியதால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் தான் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு வந்து, தெலுங்குதேசம் கட்சியின் மச்சர்லா தொகுதி பொறுப்பாளர் ஜூலகந்தி பிரம்மாரெட்டியின் வீடு, கட்சி அலுவலகத்தின் மீது கல்வீசினர். மேலும் வீடு, அலுவலகத்துக்குள் புகுந்தவர்கள் அடித்து நொறுக்கினர். அவரது வீடு மற்றும் கட்சி தொண்டர் ஒருவரின் வீடும் சூறையாடப்பட்டு தீவைக்கப்பட்டது. தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களின் பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது.
போராட்டம்
இதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி அவர்கள் சாலையில் அமர்ந்தனர். இதனால் பதற்றம் அதிகரித்தது. இதையடுது்து போலீசார் வந்து தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தால் ஆந்திராவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.மச்சர்லா நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சந்திரபாபு நாயுடு கண்டனம்
இதற்கிடையே நடந்த சம்பவத்தை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு வன்மையாக கண்டித்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛மச்சர்லாவில் தெலுங்கு தேசம் கட்சியினர் மீது ஆளும் கட்சியை சேர்ந்த குண்டர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும் வீடுகள், கட்சி அலுவலகங்களுக்கு தீவைத்துள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். ஆளுங்கட்சியின் ரவுடித்தனத்தை அடக்காமல் காவல் துறை வேடிக்கை பார்ப்பது மிகவும் மோசமானது'' என சாடியுள்ளார்.