25% "இந்தி"யர்களுக்காகத்தான் இருக்கிறாரா மோடி... டிவிட்டரில் அனல் பறக்கும் இந்தி எதிர்ப்பு பிரசாரம்
டெல்லி: நாட்டில் இந்தி பேசுவோர் 25 சதவீதம் பேர்தான். அவர்களுக்கு மட்டுமே பிரதமராக மோடி இருப்பது போலத் தெரிகிறது. எங்கு பார்த்தாலும் இந்தியில் பேசுகிறார். இந்தி அதி வேகமாக திணிக்கப்படுகிறது என்று கூறி டிவிட்டரில் கடுமையான இந்தி எதிர்ப்புப் போர் ஒன்று வெடித்துள்ளது.
இந்த இந்தி எதிர்ப்புப் போரை ஆரம்பித்து வைத்து தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.. கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள்.
#stophindiimposition என்ற பெயரில் ஹேஷ்டேக் போட்டு இது டிவிட்டரில் அனல் பறக்க ஓடிக் கொண்டுள்ளது. பல்வேறு மாநிலத்தவரும் இதில் இணைந்து இந்தித் திணிப்புக்கு எதிராக கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
எப்பப் பார்த்தாலும் இந்தியிலேயே பேச்சு
இந்த பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளோர், பிரதமர் மோடி எங்கு போனாலும் இந்தியில் பேசுகிறார். எந்த மாநிலத்திற்குப் போனாலும் இந்தியிலேயே பேசுகிறார். சுதந்திர தின உரையைக் கூட இந்தியில்தான் நிகழ்த்துகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
யாருக்கு இவர் பிரதமர்
மொழிச் சம நிலையை ஆதரியுங்கள் என்ற பெயரில் இந்த ஹேஷ்டேக்கை பெங்களூரைச் சேர்ந்த சிலர் உருவாக்கி இப்போது பிரபலமாகியுள்ளது. இதை உருவாக்கியுள்ள பலரும் தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
25 சதவீதம்தான் இந்தி பேசுகிறார்கள்
இந்த குரூப்பைச் சேர்ந்த வல்லிஷ் குமார் என்பவர் கூறுகையில், நாட்டில் 25 சதவீதம் பேர்தான் இந்தி பேசுகிறார்கள். பிறகு ஏன் இந்தியிலேயே பேசுகிறார் மோடி. இந்தி பேசுவோருக்கு மட்டும்தான் அவர் பிரதமரா என்று கேட்டுள்ளார்.
குவியும் ஆதரவு
இந்த ஹேஷ்டேக் அனல் பிரசாரத்திற்கு ஒடிஷா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு இந்தி திணிப்பை எதிர்த்துப் பதிவிட்டு வருகின்றனர்.
|
கன்னடத்தையே காணோம்
கர்நாடகத்தைச் சேர்ந்த அருண் ஜவகல் என்பவர் ரயில் டிக்கெட் ஒன்றைப் போட்டு, பெங்களூருரிலிருந்து மைசூருக்கான ரயில் டிக்கெட் இது. கர்நாடகத்திற்குள்தான் பயணம். ஆனால் டிக்கெட்டில் கன்னடத்தையே காணோம் என்று குமுறியுள்ளார்.
இந்தி பேராசிரியரும் எதிர்ப்பு
இந்தப் பிரசாரம் குறித்து டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்தி பேராசிரியர் அபூர்வானந்த் கூறுகையில், இந்திக்கு சிலரே எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட அது மதிக்கப்பட வேண்டும். பிரதமர் இந்தியில் பேசுவதை, ஏன் பிற மொழிகளிலும் மொழிபெயர்த்து உடனுக்குடன் கூறக் கூடாது. அப்படிச் செய்யாமல் போவதால்தான் இந்தி மீது அதிருப்தி ஏற்படுகிறது என்றார் அவர்.
கட்டாயக் கல்யாணம் தப்பாச்சே
ரொம்ப காலத்திற்கு முன்பு தமிழ்நாடும் இப்படித்தான் இந்திக்கு எதிராக பொங்கியபோது அனைவரும் கேலி செய்தனர், கிண்டல் அடித்தனர், கோபம் கொண்டனர். இன்று பெங்களூரில் சிலருக்குக் கோபம் வந்துள்ளது. இந்தியை சுதந்திரமாக விட்டால் யாருமே அதை வெறுக்க மாட்டார்கள்.. மாறாக காதலிப்பார்கள்.. திணிக்கும்போதுதான் கட்டாயக் கல்யாணம் போல எரிச்சல் வந்து விடுகிறது.