நாகாலாந்து: பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தது ராணுவம்!
கோஹிமா: நாகாலாந்தில் பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ராணுவம் வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டம் ஓடிங் பகுதியில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக காத்திருந்தனர். இவர்கள் என்.எஸ்.சி.என்(கப்லாங்) மற்றும் உல்பா இயக்கங்களின் தீவிரவாதிகள் என சந்தேகித்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

13 பொதுமக்கள் சுட்டுக் கொலை
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். இத்தகவல் அப்பகுதியில் பரவியதும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பொதுமக்கள் நடத்திய தாக்குதலில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த கெளதம் லால் என்ற வீரர் உயிரிழந்துள்ளதார். பங்கஜ் நாக், சுபாஷ் பாஸுமதாரி, பூரன் பூரி, அஜஸ் துரா, ஹரேந்திர தாபா மற்றும் அதாரி ஆகிய 6 வீரர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணைக்கு உத்தரவு
இச்சம்பவம் தொடர்பாக நாகாலாந்து முதல்வர் நைபியு ரியோ கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இச்சம்பவம் தொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் உயர்நிலை விசாரணை நடத்தப்பட்டு உரிய நீதி பெற்றுத்தரப்படும் எனவும் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

வருத்தம் தெரிவித்த ராணுவம்
இதனிடையே 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ராணுவம் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இச்சம்பவம் எதிர்பாராமல் நிகழ்ந்துள்ளது. இது மிகவும் வருத்தத்துக்குரியது. பொதுமக்களின் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு சட்டப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் நடத்திய தாக்குதலில் ஜவான் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோன் பின்னணி
நாகாலாந்தின் மோன் மாவட்டம் மியான்மர் எல்லையில் உள்ளது. நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங் பிரிவு) மற்றும் உல்பா தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு கோன்யாக் என்றழைக்கப்படும் நாகா பழங்குடிகள் அதிகம் வசிக்கின்ற பகுதி. உலகில் மனித தலைகளை வேட்டையாடுவதை பண்பாடாக கொண்டவர்கள் கோன்யாக் பழங்குடிகள். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மனித தலைகளை வேட்டையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. மனித தலைகளை வேட்டையாடுவதை கைவிட்ட உலகின் கடைசி பழங்குடிகள் கோன்யாக் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications