நிதி நிலைமை மேம்பட்டால் மேலும் வரிச் சலுகைகள்... அருண் ஜெட்லி தகவல்
டெல்லி: அரசு காஜானாவின் நிதி நிலைமை மேம்மடும் போது தான் இன்னும் வரிச் சலுகை அளிப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உறுதியளித்துள்ளார்.
மோடி தலைமையிலான முதல் பட்ஜெட் தாக்கல் கடந்த வியாழனன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த அந்த பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப் பட்டது.
அதேபோல், சேமிப்புகளுக்கான 80-சி பிரிவின் கீழான வருமான வரிச்சலுகை உச்சவரம்பையும் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தி அருண் ஜெட்லி அறிவித்தார். மேலும், வீட்டுக்கடன் மீதான வட்டிக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகை வழங்கப்பட்டு வந்ததையும் அவர் ரூ.2 லட்சமாக உயர்த்தினார்.
இன்னும் அதிகமான வரிச்சலுகைகளை எதிர்பார்த்த மக்களுக்கு இந்த அறிவிப்பு சற்று ஏமாற்றத்தை அளித்தது மறுக்க இயலாது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அருண் ஜெட்லி பேட்டியளித்துள்ளார். அதில் அவர் வருமான வரி விலக்கு சலுகை குறித்து நம்பிக்கையளிக்கும் வகையில் பேசியுள்ளார்.
அப்பேட்டியில் அருண் ஜெட்லி கூறியிருப்பதாவது:-
பணவீக்கம்...
நாங்கள் உயர் வரிவிதிப்பு ஆட்சியை விரும்பவில்லை. ஏனென்றால் முந்தைய அரசின் உயர் வரிவிதிப்பால்தான் பணவீக்கம் அதிகரித்தது.
முதல்முறை....
1947-ம் ஆண்டிலிருந்து இதுவரை எந்தவொரு அரசும், அடித்தட்டு, மத்தியதர, உயர்தர வருவாய்ப்பிரிவினர் என வரி செலுத்துகிற 3 பிரிவினருக்கும் ரூ.50 ஆயிரம் வரை நிவாரணம் அளித்தது இல்லை என்று கருதுகிறேன்.
கூடுதல் வரிச்சலுகை...
மத்திய அரசின் கஜானாவில் இன்னும் அதிகளவு நிதி இருந்திருந்தால், நான் இன்னும் கூடுதல் வரி நிவாரணம் வழங்கி இருப்பேன். நாளை (எதிர்காலத்தில்) அரசு கஜானாவில் கூடுதல் நிதி வந்து விட்டால், நான் (வருமான வரிச்சலுகை) நிவாரணங்களை உயர்த்துவேன்.
உற்பத்தி துறைக்கு ஊக்கம்...
உற்பத்தி துறை கடந்த 2 ஆண்டுகளாக எதிர்மறை வளர்ச்சியையே கண்டு வந்திருக்கிறது. வரி செலுத்துகிறவர்கள் கூடுதலாக செலவு செய்ய வேண்டும். இதனால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். உற்பத்தி துறைக்கு இது ஊக்கமாக அமையும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அன்னிய நேரடி முதலீடு...
மேலும், அப்பேட்டியில் ராணுவத்துறையில் 49 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிப்பதையும் நியாயப்படுத்தி அருண் ஜெட்லி பேசுகையில், ‘எனக்கு தெரிந்தவரையில், ராணுவ துறையில் 49 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை சோனியாஜிதான் எதிர்க்கிறார், ராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கு அவர் முன்னுரிமை தரவேண்டும் என்று கருதுகிறார்' எனக் கூறினார்.