மோடி சர்க்காரில் அருண் ஜேட்லி, ராஜ்நாத்சிங்கை சேர்க்க ஆர்.எஸ்.எஸ். அடம்!!
டெல்லி: மோடி தலைமையிலான அமைச்சரவையில் பாஜக தலைவர் ராஜ்நாத் மற்றும் அருண் ஜேட்லி ஆகியோர் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கமோ பாஜக ஆட்சியின் ரிமோட் கண்ட்ரோலை தன் கையில் எடுத்துக் கொள்ள தீவிரம் காட்டுகிறது.
மோடி தலைமையிலான அமைச்சரவையில் யார் யார் இடம்பெற வேண்டும் என்பதையும் ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தி வருகிறது. தாம் கட்சித் தலைவராக இருந்து கொள்கிறேன் என்று ராஜ்நாத்சிங் கூறி வருகிறார். ஆனால் அவரையும் அமைச்சரவையில் சேர்த்தாக வேண்டும் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.
அதேபோல் தேர்தலில் தோல்வியடைந்துவிட்டார் என்பதற்காக அருண் ஜேட்லியை ஒதுக்கிவிடக் கூடாது.. அவரையும் அமைச்சரவையில் சேர்த்தாக வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அடம்பிடித்து வருகிறது. அதுவும் அவருக்கு நிதித்துறை ஒதுக்கப்பட வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்.-ன் விருப்பம்.
இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுரேஷ் சோனி மற்றும் தத்தாத்ரேயா ஆகியோர் ஜேட்லியையும் சந்தித்து பேசியுள்ளனர். அதேபோல் பாஜக முன்னாள் தலைவரான நிதின் கட்காரியும் முக்கியமான இலாகாவை வாங்குவதற்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மூலமாகவே லாபி செய்து வருகிறார். இதேபோல் அனந்தகுமாரும் கூட ஆர்.எஸ்.எஸ். லாபி மூலமே அமைச்சரவை பதவிக்கு முயற்சித்து வருகிறார்.