ரவுடிகளை போல.. கட்டைகளுடன் வந்த சீன ராணுவம்.. வெறும் கையாலேயே துரத்தி அடித்த இந்திய வீரர்கள்!
இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் தவாங் பகுதியை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கிய சீன ராணுவத்தினர், இந்திய ராணுவ வீரர்களால் விரட்டி அடிக்கப்பட்டிருக்கின்றனர்.
இதனிடையே, ரவுடிகளை போல கையில் உருட்டுக்கட்டை, ஹாக்கி ஸ்டிக், கிரிக்கெட் மட்டை போன்ற ஆயுதங்களுடன் வந்த சீனப் படையினரை, இந்திய ராணுவ வீரர்கள் வெறும் கைகளை கொண்டே அடித்து விரட்டி இருப்பது தெரியவந்துள்ளது.
இந்திய வீரர்களிடம் ஏற்கனவே ஒரு முறை கல்வான் பள்ளத்தாக்கில் 'குட்டு' வாங்கி ஓடிய சீன வீரர்கள், தற்போது மீண்டும் அருணாச்சலப் பிரதேசத்திலும் மூக்குடைப்பட்டிருப்பதால் மிகுந்த அவமானம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சத்தமின்றி நுழைந்த சீன உளவு கப்பல்.. இந்திய ஏவுகணையை உளவு பார்க்கும் மெகா பிளான்? பரபரப்பு
'ஸ்கெட்ச்' போட்டு இறங்கிய சீனா
கடந்த 2020-ம் ஆண்டு லடாக்கை கைப்பற்றி விடலாம் என்ற நோக்கத்தில் சீனப் படையினர் களம் இறங்கினர். ஆனால், இந்திய வீரர்களின் தீரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், அவர்கள் லடாக்கில் இருந்து பின்வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில், சுமார் 3 ஆண்டுகள் அமைதியாக இருப்பதை போல வெளியுலகுக்கு காட்டிவிட்டு, அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதிக்குள் யாரும் எதிர்பார்த்திராத வகையில் கடந்த 9-ம் தேதி நுழைந்தனர் சீனப் படையினர்.
ஆணி பதித்த கட்டைகளுடன்..
சீன - இந்திய எல்லைப்பகுதியில் துப்பாக்கியை பயன்படுத்தக் கூடாது என்ற ஒப்பந்தம் இருப்பதால், ஆணிகள் பதிக்கப்பட்ட 'கதை' வடிவிலான கட்டைகள், ஹாக்கி மட்டைகள், கிரிக்கெட் மட்டைகள், இரும்பு ராடுகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு ரவுடிகளை போல 300 சீன வீரர்கள் தவாங் பகுதிக்குள் பெரும் ஆராவாரத்தோடு நுழைந்துள்ளனர். மின்சாரம் பாய்ச்சி 'ஷாக்' கொடுக்கும் துப்பாக்கி போன்ற 'டசீர்ஸ்' என்ற ஆயுதங்களை சிலர் வைத்திருந்தனர்.இந்த முறை தவாங்கை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பதே சீன ராணுவ வீரர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவாக இருந்துள்ளது.
வெறும் 50 வீரர்கள்..
சுமார் 17,000 அடி உயரத்தில் முழுக்க முழுக்க பனி சூழ்ந்து காணப்படும் தவாங் பகுதியில் 50 இந்திய வீரர்கள் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதை தெரிந்துகொண்டு தான் 300 சீன வீரர்கள் அங்கு நுழைந்துள்ளனர். தவாங்குக்குள் வந்த சீனப் படையினர் இந்திய ராணுவ வீரர்கள் மீது முதலில் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால், உடனடியாக நிலைமையை சுதாரித்துக்கொண்ட இந்திய ராணுவத்தினர், திருப்பி அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியை பயன்படுத்தக் கூடாது என்பதால் துப்பாக்கியை தலைகீழாக பிடித்து சீன வீரர்களின் தலையை இந்திய ராணுவத்தினர் பதம் பார்த்தனர். மேலும், தற்காப்புக் கலை நிபுணர்களாக இருந்த சில இந்திய வீரர்கள், வெறும் கைகளாலேயே சீன வீரர்களை தாக்கி நிலைக்குலையச் செய்துள்ளனர்.
அவமானத்தில் சீனா
இந்திய வீரர்களின் இந்த அதிரடி தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத சீனப் படையினர் தப்பித்தோம் பிழைத்தோம் என அங்கிருந்து ஓட்டம் பிடித்து தங்கள் எல்லைக்குள் சென்றனர். இந்த பயங்கர மோதலில் இந்திய தரப்பில் 9 வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில், சீனா தரப்பில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏற்னவே 2020-இல் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தினரிடம் இதுபோலவே வெறும் கைகளாலேயே சீனப் படையினர் விரட்டியடிக்கப்பட்டனர். தற்போது மீண்டும் அருணாச்சல பிரதேசத்திலும் இதுபோல குட்டு வாங்கி ஓடியிருப்பது சீனாவுக்கு சர்வதேச அளவில் அவமானத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.